Sunday 21 November 2010

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள்

இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எண் செய்யுள் சிற்றிலக்கியம்:

முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்.
(இ.வி.பாட்டியல், நூ.88)

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்
எண்செய்யு ளாகு மன்றே
(பிரபந்த தீபிகை, நூ.14)

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)

ஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
(தொல். செய்யுளியல் நூ. 551)

பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.

கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:

முத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)

என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா?

இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.

எண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)

இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.

முத்தொள்ளாயிரத்தின் காலம்:

முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.

முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.

‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்:

முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல், நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இருநூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட இருநூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவ நாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.

தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.

மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள, “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2), “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5), “தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.

நூலாசிரியர் சமயம்:

முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.

மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு (முத். பா.1)

என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.

முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்:

பழந்தமிழ் மரபு, பாடுபொருளை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.

புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப் பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை, துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்த நெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்:

தற்போது கிடைத்துள்ள 130 முத்தொள்ளாயிரப் பாடல்களில் 85 பாடல்கள் கைக்கிளைப் பொருண்மையில் அமைந்துள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்திணையில் இடம்பெறும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும். ‘அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்’ என்ற தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பேராசிரியர், ‘கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும்’ என்று உரை எழுதியுள்ளமையை நோக்க இரண்டு உண்மைகள் புலனாகின்றன. அவை, கிடைக்காமல் போன முழு முத்தொள்ளாயிர நூலிலும் கைக்கிளைப் பாடல்கள் மிகுதி என்பதும் இவ்வகைப் பாடல்களைக் கைக்கிளை எனப்பாகுபாடு செய்வதே மரபு என்பதுமாகும்.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்,

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொல். புறத். 28)

என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் பாடாண் திணை கூறும் கைக்களைப் பொருண்மை உடையது. இந்நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், “இக்காமப் பகுதி எழுதிணைக்குரிய காமமும், ‘காமஞ் சாலா இளமையோள் வயின்’ காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க” என்கிறார். இவ்வுரையின் வழிப் பாடாண் திணைக் கைக்கிளை என்பது அகம் எழுதிணையின் முதலில் இடம்பெறும் கைக்கிளையோ, கைக்கிளைக் குறிப்போ அன்று என்பதும் இது வேறு ஒரு கைக்கிளை, அதாவது புறப்பொருள் கைக்கிளை என்பதும் பெறப்படும். எனவே, பெண்களின் காமப்பகுதியைக் கூறும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களே என்பது பெறப்படும். நூற்பாவில் இடம்பெறும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதற்கு விளக்கமளிக்கும் நச்சினார்க்கினியர், “கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவும் கொள்க” என்பார். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பாட்டுடைத் தலைவர்களாக மட்டுமன்றிக் கிளவித் தலைவர்களாவும் வந்துள்ளமையைக் காணமுடியும்.

உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் புனையப்பட்டுள்ள முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இடைக்காலத்தில் எழுந்த பல அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கு வித்தாக அமைந்தமை இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். பக்தி இலக்கியங்கள் புனைந்து காட்டும் நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களுக்கும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் உள்ள தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முத்தொள்ளாயிரத்தின் காலத்தைச் சரியாக வரையறுத்தால் மட்டுமே இக் கைக்கிளை மரபைப் பக்தி இலக்கியங்களிடமிருந்து முத்தொள்ளாயிரம் பெற்றதா? அல்லது முத்தொள்ளாயிர இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியங்கள் பெற்றனவா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எப்படியாயினும் இரண்டிலும் செயல்படும் அகப்பொருள் படைப்பாக்க உத்தி என்பது ஒன்றே.

முடிப்பாக:

இலக்கியச் சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களின் நயத்தினை வியத்தலும், பண்பாட்டுச் செய்திகளைத் திரட்டலும், அணிநலன்களின் அழகை வெளிப்படுத்தலும் எனப் பல நிலைகளில் முத்தொள்ளாயிரப் பாடல் குறித்த திறனாய்வுகள் விரிக்கின் பெருகும் சிறப்புடையன. மாறாக, இக்கட்டுரை முத்தொள்ளாயிரம் குறித்த சில விளக்கங்களை முன்னோர் கருத்துக்களை ஒட்டியும் உறழ்ந்தும் முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,

1. முத்தொள்ளாயிரம் எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது
2. தொள்ளாயிரம் என்ற எண்ணிக்கையால் பெயர் பெற்ற இலக்கிய வகைகளில் முத்தொள்ளாயிரமும் ஒன்று.
3. இந்நூல் விருந்து என்ற வனப்பு வகையால் பாடப்பட்டது.
4. முத்தொள்ளாயிரத்தின் பாடல் எண்ணிக்கை 2,700 அன்று.
5. முத்தொள்ளாயிரம் என்பது மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் எனப் பொருள்படும்.
6. முத்தொள்ளாயிரம் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டிருக்கலாம்.
7. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரதேவ நாயனாராக இருக்கலாம் என்ற சேதுரகுநாதன் அவர்களின் கருத்து ஆய்விற்குரியது.
8. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும்.
9. முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.
10. பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம், புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளது இந்நூல்.
11. முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் தொல்காப்பியப் பாடாண் திணை கூறும் பெண்பாற் கைக்கிளை மரபினைச் சார்ந்தது.
12. பக்தி இலக்கிய நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன.

Saturday 31 July 2010

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-7


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பொதுகா:
கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று விளங்கிய கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களாக காமரா, பொதுகே, சோபத்மா ஆகிய மூன்று துறைமுகங்களைக் குறிப்பிடுவர் பெரிபுளுசு, தாலமி என்ற அயல்நாட்டுப் பயண நூலாசிரியர்கள். இவற்றுள் காமரா காவிரிப்பூம் பட்டினத்தையும், சோபத்மா மரக்காணத்தையும் பொதுகே புதுச்சேரியையும் குறிப்பிடுகின்றது என்பது ஆய்வாளர்களின் முடிபு. (சோ.முருகேசன், ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, பக். 1-11)

இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)

அருக்கன்மேடுதான் பெரிபுளுஸ், தாலமி குறிப்பிடும் பொதுகா என்பது உறுதியாகியுள்ள நிலையில் பொதுகா என்ற சொல் குறிப்பிடும் துறைமுகப் பெயர் எது? என்பது ஆய்வுக் குரியதாகிறது.

ஏனெனில் அயல்நாட்டுப் பயணியர் நம் தமிழகத்தின் எந்த ஊர்ப்பெயரையும் சரியான உச்சரிப்போடு குறிப்பிடுவதில்லை. அவர்கள் தொண்டியைத் திண்டிஸ் என்றும் கொற்கையைக் கொல்சாய் என்றும் காவிரிப் பூம்பட்டினத்தைக் காமரா என்றும் மரக்காணத்தைச் சோபட்மா என்றும் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரி வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் புதுச்சேரி என்ற பெயர்தான் பொதுகே –பொதுகா என்று பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் குறிப்பிடப்பட்டது என்கிறார்கள்.

புதுச்சேரி – போதுச்சேரி – போது – பொதுக்கே

Puducherri – Poducheri – Podu - Poduke

என்று விளக்குகிறார் சோ. முருகேசன். (ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப. 9)

இன்றைக்கு வழக்கிலுள்ள புதுச்சேரி என்ற பெயரைத்தான் பெரிபுளுஸ், தாலமி போன்றோர் பொதுகா எனக் குறிப்பிட்டார்கள் என்பது பொருத்தமில்லை. ஏனெனில் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாக மக்கள் வாழத் தொடங்கிய இன்றைய புதுச்சேரி நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்தாம் புதுச்சேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியை இப்பெயரால் குறிப்பிட்டிருக்க வாய்ப்பேயில்லை.

ஐராவதம் மகாதேவன் பொதிகை என்ற சொல்லோடு தொடர்புடையது பொதுகே என்கிறார். பொதிகை மலை, அகத்தியர் முதலான தொன்மச் செய்திகளோடு தொடர்புபடுத்தி முற்காலத்தில் இப்பகுதியில் அகத்தியர் வந்து தங்கியிருக்கலாம் என்றும் அதன்பொருட்டு இவ்வூர் பொதிகை என வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடும் செய்திகள் வெறும் யூகங்களேயன்றி உண்மையில்லை. ஏனெனில், புதுச்சேரி ஊரின் மேற்குப்பகுதி நிலப்பரப்பு சற்று உயர்ந்து செம்மண் மேடாக உள்ளதேயன்றி மலைகளோ குன்றுகளோ இப்பகுதியில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

முனைவர் சு. தில்லைவனம், பொதுக்கம் என்ற பெயரின் திரிபு வடிவமே பொதுகே என்கிறார். அதற்கு அவர் காட்டும் சான்று, “புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்” என்ற கலித்தொகை (பா.88. அடி.10) பாடலடியாகும். பொதுக்கம் என்பது நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பகுதி என்று அவர் விளக்கமளிக்கிறார். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.19) அவர் மேற்கோள் காட்டும் பாடல் ஒரு மருதக்கலி பாடலாகும். அப்பாடலில் இடம்பெறும் சொல் பொதுக்கம் அன்று, ஒதுக்கம் என்பதாகும். ஒதுக்கம் என்பதற்கு நடை என்பது பொருள். நண்டின் நடை மணலில் ஏற்படுத்திய கீறலைப் பற்றியது அப்பாடல் குறிப்பிடும் செய்தி. எனவே பொதுக்கம் என்று கலித்தொகை குறிப்பிடும் சொல்லே பொதுகா என்பதன் மூலவடிவம் என்று தில்லைவனம் குறிப்பிடும் விளக்கம் பொருந்துமாறில்லை.

பொதிகை, பொதுக்கம் என்ற இரண்டு விளக்கங்களும் பொருந்தாத நிலையில் பொதுகா, பொதுகே என்ற சொல்லால் குறிப்பிடப்படும் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியின் பழையபெயர் குறித்த ஆய்வு தேவைப்படுகின்றது.

போதிகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, காக்கையன் தோப்பு என்றழைக்கப்படும் சாக்கையன் தோப்பு, மேல் சாத்தமங்கலம் முதலான ஒத்த வரலாற்றுச் சிறப்புடைய ஊர்கள் அனைத்திலும் பௌத்த மதமே செல்வாக்கு பெற்ற மதமாயிருந்தமையும், பௌத்த வழிபாடே பெருவழக்காய் இருந்தமையும் முன்னர் மெய்ப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுகா என்ற துறைமுகப் பெயரும் பௌத்த அடையாளங்களோடு கூடிய ஊர்ப்பெயராய் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. அந்த வகையில் பொதுகா என்ற சொல்லோடு ஒலி ஒப்புமையுடைய போதிகா (போதி+கா) என்பதே அருக்கன்மேடு துறைமுகத்தின் பழைய பெயராயிருக்கலாம்.

பௌத்தர்கள் தங்கள் பெயருடனோ அல்லது தங்கள் வழிபாட்டுத் தலங்களின் பெயர்களுடனோ போதி என்ற சொல்லை இணைத்துப் பெயரிடுவது மரபு. சான்று: இளம் போதியார், வச்சிர போதி, போதி மங்கலம். பௌத்தரை போதியார் என்று தேவாரம் குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.

போதி +கா, பண்டைக்காலத்தில் பூந்தோட்டங்களுக்கு இடையில்தான் புத்தக் கோயில்களை அமைப்பது வழக்கம். கா என்பது தோட்டம், சேர நாட்டில் இன்றும் சாத்தன் காவு என்ற பெயர் வழங்குகிறது. புத்த வழிபாடாகிய சாத்தன் வழிபாடு இன்று சாஸ்தா வழிபாடாக மாறியுள்ளமையை நினைவுகூர்தல் வேண்டும். போதி+கா, புத்தன் வழிபாடுள்ள தோட்டம் என்ற பொருளில் போதிகா என்று வழங்கப்பட்ட பெயரே பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் பொதுகா –பொதுகே என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். E. H. Warmington வார்மிங்டன் போதிகாவை போதுஸ் என்று குறிப்பிடுவதனையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப. 15)

போதிகா – போதுகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, சாக்கையன் தோப்பு முதலான பௌத்தச் சிற்றூர்களை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய துறைமுகப் பட்டினமே போதிகா என்பதாகும். தாலமி இவ்வூரைப் பொதுகா எம்போரியம் என்று குறிப்பிட்டுள்ளார். எம்போரியம் என்பதற்கு வணிகத்தலம் என்பது பொருள். தாலமி குறிப்பிட்டுள்ளது போல் போதிகா ஒரு மிகச்சிறந்த வணிகத்தலமாகத் திகழ்ந்திருந்தமை புதைபொருள் சான்றுகளால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

முடிப்பாக:

அரிக்க மேடு அன்று அது அருக்கன் மேடு.

அருக்கன் மேட்டின் விருமன் கோயிலில் உள்ள சிலை புத்தர் சிலையே.

காக்காயன் தோப்பு முந்தைய சாக்கையன் தோப்பே.

மேல்சாத்தமங்கலம் அகழ்வாய்வும் அருக்கன் மேட்டின் பௌத்தத் தொடர்பை உறுதி செய்கின்றது.

அருக்கன்மேட்டுப் பானை ஓட்டு பிராமி எழுத்து வடிவங்கள் பௌத்தர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டனவே.

பொதுகா புதுச்சேரியைக் குறிப்பிடவில்லை.

பொதுகாவின் பழைய சரியான பெயர் போதிகா என்பதே.


துணை நின்ற நூல்கள்:

1. அ. இராமசாமி -
புதுச்சேரி வரலாறு,
பூங்குன்றம் பதிப்பகம்,
மதுரை-9
1992
2. கல்லாடன் -
புதுச்சேரி மரபும் மாண்பும்,
புதுச்சேரி வரலாற்றுச் சங்கம்,
புதுச்சேரி-1,
2002

3. சு. தில்லைவனம் -
புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும்,
சிவசக்தி பதிப்பகம்,
புதுச்சேரி-8,
2007
4. சோ. முருகேசன் -
கசாலின் பார்வையில் அரிக்கமேடு,
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
1997
5. சோ. முருகேசன் -
ழுவொ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
2000
6. சீனி. வேங்கடசாமி -
பௌத்தமும் தமிழும்,
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சேன்னை-14
2007
7. ந. வேங்கடேசன் -
வரலாற்றில் அரிக்கமேடு,
திருமுடிப் பதிப்பகம்,
வில்லியனூர், (புதுச்சேரி)
1990

Tuesday 13 July 2010

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்



அருக்கன்மேட்டில் கிடைத்த புதைபொருட் சின்னங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
‘யாடு வளபூதியின் பானை’ என்ற பிராமி எழுத்துக்கள் இடப்பட்ட பானைஓடு ஒன்று அருக்கன்மேட்டில் கிடைத்துள்ளது. (அ. இராமசாமி, புதுச்சேரி வரலாறு, ப. 19)

இப் பானைகளில் காணப்படும் எழுத்துக்கள் கி.மு. 2 முதல் கி.பி. 2 வரையிலான தமிழகப் பாறைக் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களே.

பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என்ற நம்பிக்கையுண்டு. மாமன்னர் அசோகர் தொடங்கி பௌத்தர்களே இந்தியா முழுவதிலும் பிராமி எழுத்தைப் பரவலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் பிராமி எழுத்துக்களின் உபயோகம் பௌத்தர்களாலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கருதவும் வாய்ப்புள்ளது.

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

பௌத்தம் அழிக்கப்பட்டது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பௌத்தம் அழிக்கப்பட்டது:

புதுச்சேரியில் பௌத்தமதம் பெருவழக்காயிருந்த வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் பிற்காலத்தில் பௌத்த விகாரைகளும் பௌத்தமும் பௌத்தமத அடையாளங்களும் மத வன்முறைகளால் திட்டமிட்டுத் தாக்கி அழிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில சான்றுகள் புதுவைப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த, மேலும் இரண்டு புத்தர் சிலைகள் புதுவையில் கிடைத்துள்ளன. ஓன்று, புதுவை அரசின் பழைய பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் மற்றொன்று கருவடிக்குப்பம் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு சிலைகளுமே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ள கழுத்து வரையிலான கருங்கல் சிலைகளாகும்.

அருக்கன்மேட்டுப் புத்தர் சிலை குறித்து P.Z. பட்டாபிராமன் தந்துள்ள வருணனைகளை முற்றிலும் ஒத்ததாக இச்சிலைகள் உள்ளன. சிலையின் இடுப்பில் ஒரு வேட்டியும் மார்பில் மடித்துப் போடப்பட்டுள்ள துண்டும் காணப்படுகின்றன. பத்மாசன முறையில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிலைகளில் பகவான் புத்தர் இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் அமர்ந்துள்ளார்.

இந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் மட்டுமல்லாமல் கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)

இப்படிப் புத்தர் சிலையின் துண்டிக்கப்பட்ட உடல் மற்றும் தலைப்பகுதிகள் புதுவைப் பகுதிகளில் கிடைப்பதிலிருந்து பௌத்த மதமும் மத அடையாளங்களும் பிற்காலத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை உறுதியாகின்றது.

மேலே குறிப்பிட்டுள்ள இம்மூன்று புத்தர்சிலையின் பகுதிகளும் தற்போது புதுச்சேரி அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதோடு பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன் மேடும் சாக்கையன் தோப்பும்:

அரிக்கன்மேடு என்ற பெயரால் வழங்கப்படும் புதையுண்ட நகரம் அருக்கன் மேடே என்பதும் அங்குள்ள பழைய சிலை புத்தர் சிலையே என்பதனையும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு அகச்சான்று அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு என்ற ஊர்ப்பெயராகும்.

காக்காயன் தோப்பு என்ற பெயரால் அறியப்படும் அவ்வூர் முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப் பட்டிருக்கலாம். சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும். செஞ்சியாற்றின் கிழக்கு மற்றும் தெற்குக் கரைகளில் அருக்கன்மேடு அமைந்திருப்பதும் அருக்கன்மேட்டை ஒட்டிய தென்பகுதி நிலப்பரப்பாகச் சாக்கையன் தோப்பு அமைந்திருப்பதும் புத்தர் வழிபாடு இப்பகுதிகளில் பெருவழக்காய் இருந்திருக்கக் கூடும் என்பதனை உறுதி செய்கின்றன.

அருக்கன் மேடும் மேல் சாத்தமங்கலமும்:

இன்றைய புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் வில்லியனூருக்கு அருகே வில்லியனூர் ஏம்பலம் சாலையில் உள்ள ஊர் மேல்சாத்தமங்கலம். சாத்தன் என்ற சொல்லும் மங்கலம் என்ற சொல்லும் புத்த மதத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் சொற்களாகும். சாத்தமங்கலம் என்ற பெயரே அவ்வூர் ஒரு பௌத்த ஊர் என்பதனை வெளிப்படுத்தும்.

மேல் சாத்தமங்கலத்தில் இந்தியத் தொல்பொருள் துறையின் தென்பகுதிப் பொறுப்பாளர்கள் 26-2-83 முதல் 6-3-83 முடிய அகழ்வாய்வு மேற்கொண்டார்கள். அவ்வகழ்வாய்வில் சாத்தமங்கலத்தின் தொன்மை குறித்த அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வகழ்வில் உடனிருந்து பணியாற்றிய வில்லியனூர் வேங்கடேசன் தரும் செய்திகள் மிகவும் இன்றியமையாதன.

“இரண்டு மீட்டர் சதுரத்தில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் சோதனைக்குழி தோண்டப்பட்டது. அதில் பல அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கிடைத்த பொருள்கள்: கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பெற்ற ஓடுகள், ரௌலட்டட் என்றழைக்கும் ரோமாபுரியில் செய்த மட்பாண்ட ஓடுகள், ஆம்போரா என்றழைக்கப்பெறும் மது ஜாடிகளின் துண்டுகள், ஜாடியின் மூடிக் குமிழ்கள், வழவழப்பான ஓட்டுத் துண்டுகள், மெகலித்திக் காலக் கட்டத்தைச் சேர்ந்த ஓடுகள்” (வரலாற்றில் அரிக்கமேடு, ப. 147)

மேல் சாத்தமங்கலத்தில் கிடைத்த அத்துணைப் பொருள்களும் நமக்கு அருக்கன் மேட்டில் கிடைத்த புதைபொருட்களையே ஒத்திருக்கின்றன. அருக்கன் மேட்டின் காலத்தை ஒத்த கி.பி. முதலிரு நூற்றாண்டுகளின் நாகரீகச் சின்னங்களே சாத்தமங்கலப் புதைபொருட்கள் என்பது தெளிவு. அருக்கன்மேட்டு நாகரிகமே சாத்தமங்கலம் வரை பரவியிருந்தமை தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப் படுத்தப்பட்ட நிலையில் அருக்கன்மேடு தொடங்கிச் சாத்தமங்கலம் வரை பௌத்த மதமே பெருவழக்கு பெற்றிருந்தது என்று துணிய இடமுள்ளது.

Monday 5 July 2010

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

அருக்கன்மேடு – அரிக்கமேடானது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேடு – அரிக்கமேடானது:

அரிக்கமேடு பெயராய்விற்கும் சமயப் பின்னணி குறித்த ஆய்வுகளுக்கும் தக்க ஆதாரமாயிருக்கும் குறிப்பிட்ட அப்புத்தர் சிலை குறித்த ஆய்வு முதலில் முக்கியத்துவம் பெறுகின்றது. புதுச்சேரி வரலாற்றாய்வாளர் P.Z. பட்டாபிராமன் 1956 மே மாதம் வெளியான ‘லெ த்ரே துய்னியம்’ le trait-d’union என்ற மாத இதழில் எழுதியுள்ள கட்டுரை இச்சிலை புத்தர் சிலையே என்பதனையும் இம்மேடு அரிக்கன்மேடே என்பதனையும் உறுதிசெய்கின்றது.

கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் மேற்கோள் காட்டும் பகுதி பின்வருமாறு,

“அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு என்ற ஒரு பெருமணல்மேடு அரியாங்குப்பம் ஆற்றிற்குக் கீழ்க்கரையில் கம்பீரமாக உயர்ந்து காட்சியளிக்கிறது.
அம்மணல்மேட்டில் ஒரு பழங்கால புத்தர் சிலை உள்ளது. இம்மேட்டிற்கு ‘அரிக்கன்மேடு’ என்று பெயர் வரக்காரணம் என்ன என்று யோசிக்கும் போது புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்பது நமது நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இம்மேடு அருக்கன்மேடு என்று அழைக்கப்பட்டு, பின்னர் அரிக்கமேடு என மருவியுள்ளது.

கருங்கல் சிற்பமாகிய அப்புத்தர் சிலையின் உயரம் 118 செ.மீ ஆகும். தலைமுடி சுருட்டையாகவும் தலைஉச்சியில் கொண்டையும், காதுகளின் கீழ்ப்பாகம் தொங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. சிலையின் இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் (போர்த்திய நிலையில்) அலங்கரிக்கின்றன. பத்மாசன முறையில் சிலை ஒரு பத்ம பீடத்தில் உட்கார்ந்துள்ளது. இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் உள்ளன. இது 10ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 11ஆம் நூற்றாண்டில் அமைந்ததாக இருத்தல் வேண்டும்.”

P.Z. பட்டாபிராமன் சிலை குறித்துத் துல்லியமாகத் தரும் தகவல்கள், அதாவது இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் என்று ஆடை குறித்துக் குறிப்பிடும் செய்திகள் அச்சிலை புத்தர் சிலையே என்பதனை உறுதிப் படுத்துகின்றன.

அருகன் சிலை, புத்தர் சிலை இரண்டும் சற்றேறக்குறைய ஒரே வடிவில் செதுக்கப்பட்டாலும் இரண்டு சிலைகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆடையே ஆகும். அருகன் சிலைகளில் ஆடை இருப்பதில்லை. புத்தர் சிலைகளில் மட்டுமே ஆடையிருப்பதாகச் செதுக்கப்படும். (சிலையின் ஆடை குறித்த தகவல்களைக் கட்டுரை ஆசிரியரும் நேரில் கண்டும் புகைப்படமெடுத்தும் உறுதி செய்துகொண்டார்)

இச்சிலை குறித்த பழைய குறிப்பொன்று உண்டு. 1761 ஆம் ஆண்டில் வெளியான லெ ழாந்த்தீய் -le gentil என்ற வரலாற்று அறிஞரின் பயணநூலில் இச்சிலை குறித்த விபரங்களை அவர் பதிவு செய்துள்ளார், “அம்மணல் வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இச்சிலையானது தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை போன்றே காணப்படுகிறது. தலையின் வடிவம், முகபாவம், கைகளை அமைத்திருக்கும் முறை, அதன் காதுகள் அனைத்தும் புத்தர் சிலையை ஒத்திருக்கின்றன. அங்கிருந்த மக்களிடம் நான் விசாரித்தபோது அவர்களும் இது பவுத்த சிலை (Baouth) என்று கூறினர்” (கசாலின் பார்வையில் அரிக்கமேடு, ப.115)

வரலாற்று அறிஞர் லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயணக் காலத்தில் மக்களால் பவுத்த சிலை என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலை காலப்போக்கில் பல பெயர் மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

லெ ழாந்த்தீய் -le gentil அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அப்புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் அச்சிலை நிறுவப்பட்ட காலத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் புத்த விகாரையில் வைத்து வழிபடப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்விகாரை காணாமல் போனது வரலாற்றில் ஒரு வினாக்குறியே! புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பொன்று உண்டு.



அருக்கன்மேட்டு புத்தர் சிலை - இன்றைய தோற்றம்

புகைப்படம்: கட்டுரை ஆசிரியர்


“நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் இருந்தது போன்றே புதுச்சேரியிலும் அக்காலத்தில் பர்மா கோயில் இருந்துள்ளது. இதுவும் ஒரு புத்த கோவிலேயாகும். இங்கு புத்த கோவிலிருப்பதானது புதுச்சேரி துறைமுகத்தின் புகழை உயர்த்துவதுடன் இங்கு ஒரு புத்த சமூகமும், புத்தமத இயக்கமும் இருந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. அத்துடன் இந்தோ சீனாவிலிருந்து வந்த ஒரு புத்த சமுதாயமே இங்கு வாழ்ந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.” என்று லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயண நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் (ழுவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப.53)

அருக்கன் மேட்டின் பவுத்த கோயில், பர்மா கோயில் என்ற பெயரால் வழங்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருபதாம் நூற்றாண்டில் அச்சிலையை நிறுவி இந்து சமயக் கலப்புடன் வழிபாடு செய்துவரும் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் அக்கோயிலை பிரமன் கோயில் என்றழைத்தனர். பர்மா கோயில் என்பதுதான் பிரமன் கோயில் என்று மாறியிருக்கலாம். அண்மைக் காலமாக அக்கோயில் விருமன் கோயில் என்று வழங்கப்படுவது களஆய்வில் கண்டறியப்பட்டது.

பர்மா கோயில் - பிரம்மன் கோயில் - விருமன் கோயில்

விருமன் கோயிலில் புத்தர் ருத்ராட்சம் அணிந்து நெற்றியிலும் உடம்பிலும் நீறு பூசி புதிய அவதாரம் எடுத்திருப்பது போதாதென்று கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று பெயரிடப்பட்டிருப்பது கால மாற்றத்தின் விளைவு.

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அரிக்கமேடு - பெயர்க் காரணம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அரிக்க மேடு:

புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும் கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே வங்காள விரிகுடாவை ஒட்டி வராகநதி எனப்படும் செஞ்சியாற்றங் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான பகுதியே அரிக்கமேடு.
அரிக்கமேடு பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கே.ஆர். சீனிவாசன் தம் வாழ்வியல் களஞ்சியக் கட்டுரையில் அரிக்கமேடு என்பது அருக்குமேடு (Mound of ruins)அல்லது அருகுமேடு (Mound on ariver bank)என்பதன் திரிபாகலாம் என்கிறார். (வாழ்வியல் கலைக் களஞ்சியம் தொகுதி-1, ப. 732) ஆற்றின் போக்கால் அரிக்கப்பட்ட கரை என்பது இன்றைய நிலை. இன்றைய நிலையை விளக்கும் பெயர்க் குறியீட்டை அன்றைக்கே அப்பகுதிக்கு இட்டு வழங்கியிருப்பார்கள் என்ற விளக்கம் பொருத்தமாயில்லை.

களப்பிரர் காலத்துச் சமணசமய ஆக்கிரமிப்பின் காரணமாகத் தமிழகத்தில் நுழைந்த அருக வழிபாடு பொதுகே பகுதியில் நிலைபெற்றதால் பண்டைய பொதுகே என்னும் பெயர் மறைந்து அருகன்மேடு என்னும் பெயரே பரவலாக வழங்கப்படலாயிற்று, அருகன்மேடு என்னும் பெயரே காலப்போக்கில் மருவி அரிக்கமேடு என்றாயிற்று என்பார் முனைவர் சு.தில்லைவனம் (புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.23).

இக்கூற்றுக்கு, இப்பகுதியில் கிடைத்த புத்தர் சிலையை அருகன் சிலை என்று தவறாகக் கணித்துச் சான்று காட்டுவார் அவர். அவர் சான்று காட்டும் சிலை புத்தர் சிலையே என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே முனைவர் சு.தில்லைவனம் அவர்களின் கூற்று பொருந்தாது.

புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

புதுச்சேரியில் பௌத்தம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமதம், தமிழகத்தில் பரவி செல்வாக்கு பெற்ற காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கடைச்சங்க நூல்களில் பௌத்தம் குறித்த வெளிப்படையான குறிப்புகள் கிடைக்காத நிலையில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனால் இக்கருத்து பொருந்தாது.

ஏனெனில் மாமன்னர் அசோகர் காலத்திலேயே அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழகத்தில் பரப்பப்பட்டது என்பதற்கான அகச்சான்றாக அசோகரின் கல்வெட்டு ஒன்றனை எடுத்துக்காட்டி நிறுவுகின்றார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அவர் கூறும் ஆதாரம் பின்வருமாறு,

வட இந்தியாவின் பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படும் அசோகரின் சாசனத்தில் (Rock Edict iii) தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியோகஸ் என்னும் யவன அரசருடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை- அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அறவெற்றியைக் கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்டபொருள் என்னவென்றால், அசோகச் சக்கரவர்த்தி தூதர்களை (பௌத்த பிட்சுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பலநாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. (மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப.25)

ஆக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது என அறிகிறோம். தமிழகத்தில் பௌத்தம் பரவப் பணியாற்றியவர் மாமன்னர் அசோகரின் தம்பியாகிய மகிந்தர் என்றழைக்கப்படும் மகேந்திரர் ஆவார்.

Sunday 17 January 2010

பாக்கியராஜ் செய்யாத புரட்சி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி -6

பாக்கியராஜ் செய்யாத புரட்சி

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலும் திரைப்படமும்:

1931 இல் வெளிவந்த கமலவல்லி என்ற இந்நாவல் 1936 இல் நாவலாசிரியராலேயே திரைக்கதை அமைக்கப்பட்டு அவரின் சொந்தத் தயாரிப்பில் சொந்த இயக்கத்தில் மிஸ்.கமலா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட செய்தி கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலைப் புரட்சிகரமான மரபு மீறல்களோடு படைத்த டி.பி.ராஜலட்சுமியால் அதே துணிச்சலோடு திரைப்படத்திற்குத் திரைக்கதை அமைக்க இயலவில்லை என்பது ஒரு முக்கியப் பதிவு.

மிஸ்.கமலா திரைப்படத்தின் முன்பாதிக் கதை சற்றொப்ப நாவலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் பின்பாதிக் கதை திரைக்கதையில் மாறுபடுகின்றது.
திரைப்படத்தில், கதைத்தலைவி கமலி கண்ணப்பன் காதல் -கமலி டாக்டர் கட்டாயமணம் -முதலிரவில் கமலி டாக்டரிடம் தன்காதலை வெளிப்படுத்தல்- டாக்டர் காதலர்களைச் சேர்த்துவைப்பதாக உறுதியளித்தல் என்று தொடரும் கதை பின்னர் மாற்றமடைகிறது. எஸ்.எம். உமர் எழுதும், மிஸ். கமலா திரைப்படக் கதைச்சுருக்கத்தின் பின்பாதி வருமாறு,

“கமலி, கண்ணப்பனிடம் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறாள். கண்ணப்பன் மறுத்து விடுகிறான். நீ இன்னொரு வனால் தாலி கட்டப்பட்டவள் என்று! பாவம் கமலி! வேறு என்ன செய்வாள் அவள்? தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.

அந்தக் காரில் இருந்தவர்கள் கண்ணப்பனின் பெற்றோர். அவர்கள் கமலியைத் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர், சிகிச்சைக்காக. சிகிச்சை பார்க்கவந்த டாக்டர் வேறு யாருமல்லை, கமலிக்குத் தாலிகட்டிய, தற்போது அவளைச் சகோதரியாகப் பாவிக்கும் அதே டாக்டர்தான்.
தன் வீட்டிற்குள்ளேயே கமலி வந்துவிட்டதைக் கண்ட கண்ணப்பன் கலங்குகிறான். ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

உடல்நலம் தேறிய கமலி வயிற்றுப் பிழைப்புக்காக ஜிப்சி வேஷம் போடுகிறாள். அந்த வேஷத்தில் அவளைக் காதலிக்கத் தலைப்படுகிறான் கண்ணப்பன். ஜிப்சி வேஷத்தில் இருந்த கமலி, மிக சாமார்த்தியமாக, தன்னை அவன் மணந்துகொள்வதாக ஓர் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை எடுத்துக் காட்டுகிறாள்.

‘நான்தான் ஜிப்சி, ஜிப்சிதான் நான்!’ என்கிறாள். டாக்டரும் கமலி என் சகோதரிதான் என்கிறார். கண்ணப்பன் கமலி காதல் கைகூடுகிறது.”
(எஸ்.எம். உமர், கலை உலகச் சக்கரவர்த்திகள், பக். 436)

கமலவல்லி நாவலில் தன் அக்காள் பத்மாசனி பாரிஸ்டர் இவர்களின் வற்புறுத்தலுக்கு ஒருவாறு உடன்பட்டுக் கமலவல்லியை மணந்துகொள்கிறான் கண்ணப்பன். ஆனால் திரைப்படத்திலோ கண்ணப்பன், ‘இன்னொருவன் தாலிகட்டிய பெண்’ என்று கமலியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். பிறகு ஜிப்சி வேஷம் போட்டு ஒருவகையில் ஏமாற்றித்தான் கண்ணப்பனை மணக்கிறாள் கமலி.

நாவலுக்கும் திரைப்படத்துக்குமான இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாவல் என்ற படைப்பிலக்கியத்தில் பேசப்படும் மரபுமீறல்களும், சீர்திருத்தங்களும் வெகுசன ஊடகமாம் திரைப்படத்திற்கு என்று வருகிறபோது வழுக்குகிறது. நாவலுக்கும் திரைப்படத்துக்கும் படைப்பாளி ஒருவராய் இருந்தபோதும் இதில் மாற்றமில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில்தான் இந்நிலை என்றில்லை, எண்பதுகளில் சற்றேறக்குறைய இதே கமலவல்லி நாவலின் கதையை தம் சொந்தப் படைப்புபோல் இயக்குநர் கே.பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தபோது, தன்மனைவியைக் காதலித்தவனுக்கு மீண்டும் அவளையே திருமணம் செய்துவைக்கக் கணவன் தயாராக இருந்தாலும் திருமணம் மற்றும் தாலி பற்றிய புனிதங்களிலிருந்து விடுபட இயக்குநர் கே.பாக்யராஜ் தயாராயில்லை. மரபு மற்றும் புனிதங்களை மீறாதவனாகவே காதலனைச் சித்தரிக்கின்றார் அவர்.

எண்பதுகளில் கூடப் படைப்பாளிகள் செய்யத் தயங்கிய மரபுமீறல்களை முப்பதுகளிலேயே செய்துகாட்டிய நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் சகலகலாவல்லி என்ற பெருமைக்குரிய டி.பி.ராஜலட்சுமியின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் நாவல் இலக்கிய வரலாற்றில் அவருக்குரிய தனியிடம் குறித்த பதிவுகள் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் சுவடுகளற்றுப் போகாமல் உரிய கவனம் பெறுதல்வேண்டும்.

Sunday 10 January 2010

காதல் மணத்தை வலியுறுத்தும் டி.பி.ராஜலட்சுமி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-5

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

காதல் மணத்தின் மேன்மை:
நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி நாவலில் மையப்படுத்தி விவாதப் பொருளாக்குவது பெண்களின் திருமணச் சுதந்திரம் குறித்த சிக்கலையே. இப்பிரச்சனை அவர் தம்சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனையும் கூட. தம் வாழ்க்கையிலும் தம்மையொத்த பெண்களின் வாழ்க்கையிலும் நேர்ந்த இக்கட்டாயமணக் கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் போக்கிலேயே கமலவல்லி நாவலின் கதைப்பின்னல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமணத்திற்கு மாற்றாக, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அடியொற்றிய காதல் மணம் வழிவந்த இல்லறமே மேலானது என்பதை வலியுறுத்த விரும்புகிறார் நாவலாசிரியர், அதனோடு பெண்களை எல்லாநிலைகளிலும் சுந்திரமாகச் செயல்படத் துணைபுரிவதே ஆண்களின் கடமையாயிருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் போக்கில் நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

நாவலில் கமலவல்லியின் தடபுடலான மறுமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கிப் பாரிஸ்டர் பேசும் நீண்டஉரையின் மையக் கருத்தாக இடம்பெற்றிருப்பது காதல் மணத்தின் மேன்மையும், பெண்களின் சுதந்திரம் குறித்த பிரகடனமுமே.

பாரிஸ்டர் பக்தவச்சலம் உரையின் ஒரு பகுதி,

“இப்பரத கண்டத்தில் அக்காலத்தில் பருவமடைந்த ஆண்பெண்கள் ஒருவரையொருவர் மறைமுகமாய்ச் சந்தித்துக் காதலித்த பின்னரே பகிரங்கத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கமிருந்து வந்தது. இதனால் அக்காலத்திலிருந்த குடும்பங்களில் உண்மைக்காதலும் உறுதிப்பாடும் நம்பிக்கையும் மலிந்து கிடந்தன. இவ்வுண்மைகளுக்குத் தொல்காப்பியம், மணிமேகலை, குண்டலகேசி முதலிய காவியங்களே தக்கசான்றாகும்.

தற்காலமோ அத்தகைய களவுக் காதல் மணம் முற்றிலும் ஒழிந்துபோய், விலைமணம் மலிந்து காட்டிலிருக்கும் பெண்ணுக்கும் வீட்டிலிருக்கும் ஆணுக்கும் புரோகிதன் பொருத்தம் தந்தான் என்றவுடன் சதிபதிகளின் இஷ்டத்தையும்கூட எதிர்பாராமல் பலவித சடங்குகளின் மூலம் அவ்விருவரையும் சேர்த்துவைத்து விவாகமென்று சொல்லிவிடுகிறோம்.

அதிலும் பெரியவர்களென்னப் பட்டவர்கள் குழந்தைகளின் கல்யாண விஷயத்தில் பெரும்பாலும் தங்களுடைய உறவு, வருமானம், அந்தஸ்து முதலிய சுயநலங்களையே பெரிதெனக் கருதுகிறார்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 122-123)

“மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து, அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து இன்பவாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தைச் சார்ந்த பெருத்த கடமையாகும்.

ஆருயிர் நண்பர்களே! தேனினும் இனிய நம்தமிழ்நாடு பழைய சீரும் சிறப்பும் பெற்றுப் புகழ்பெற வேண்டுமானால் நீங்கள் பெண்களை, ஆண்களைப் போலவே நினையுங்கள். அவர்களிடம் உங்கள் சுயநலத்தை விட்டுவிடுங்கள். அவர்களுடைய பெருமைக்கும் உயர்வுக்கும் அவர்களைக் கொண்டாடுங்கள். எதன் பொருட்டும் உங்கள் சுயநலத்திற்காக அவர்களுடைய இ~;டத்தையும் சந்தோ~த்தையும் பறிமுதல் செய்யாதீர்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 123-124)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாவலின் பகுதியில் பாரிஸ்டர் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, நடைமுறையில் உள்ள ஏற்பாட்டு மணத்தை விலைமணம் என்று சாடியும் மணமக்களின் விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப்பட்டு பெரியவர்களின் சுயநல வெளிப்பாடாகவே இவ்வகைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்று விமர்சித்தும் புரோகிதன் தருகின்ற பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களின் பொருத்தமின்மையை நையாண்டி செய்தும் டி.பி.ராஜலட்சுமி எழுப்பும் எதிர்க்குரல்களின் பன்முகப் பரிமாணம் நம்மை வியக்க வைக்கிறது.

கமலவல்லியின் கணவன் டாக்டர் சந்திரசேகரன் கமலவல்லியைக் கண்ணப்பனுக்கு மறுமணம் செய்துவைக்கும் முயற்சியின் ஊடாகவே நாவலாசிரியர் சந்திரசேகரனுக்குத் தக்கதொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றார். அவள்தான் பாரிஸ்டர் பத்மாசனி தம்பதிகளின் புதல்வி செல்வாம்பாள். டாக்டர் சந்திரசேகரன் செல்வாம்பாள் திருமணத்தை ஒரு ஏற்பாட்டு மணமாக அதாவது பெற்றோர் பார்த்து மணம்முடிக்கும் விலைமணமாகச் சித்தரிக்க டி.பி.ராஜலட்சுமி விரும்பவில்லை.

அது ஒரு காதல்மணமாக அமைய வேண்டும் என்று நாவலாசிரியர் விரும்பியதன் விளைவாக அன்னநடை ஆரணங்கு என்று பெயரிடப்பட்ட நாவலின் பதினோராம் அத்தியாயம் செல்லாம்பாள் சந்திரசேகரன் இருவரின் காதலை விவரிக்கும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி காதல்மணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடே செல்வாம்பாள் டாக்டர் சந்திரசேகரன் காதல்பகுதி.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...