Sunday 21 November 2010

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள்

இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எண் செய்யுள் சிற்றிலக்கியம்:

முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்.
(இ.வி.பாட்டியல், நூ.88)

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்
எண்செய்யு ளாகு மன்றே
(பிரபந்த தீபிகை, நூ.14)

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)

ஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
(தொல். செய்யுளியல் நூ. 551)

பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.

கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:

முத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)

என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா?

இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.

எண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)

இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.

முத்தொள்ளாயிரத்தின் காலம்:

முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.

முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.

‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்:

முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல், நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இருநூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட இருநூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவ நாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.

தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.

மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள, “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2), “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5), “தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.

நூலாசிரியர் சமயம்:

முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.

மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு (முத். பா.1)

என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.

முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்:

பழந்தமிழ் மரபு, பாடுபொருளை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.

புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப் பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை, துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்த நெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்:

தற்போது கிடைத்துள்ள 130 முத்தொள்ளாயிரப் பாடல்களில் 85 பாடல்கள் கைக்கிளைப் பொருண்மையில் அமைந்துள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்திணையில் இடம்பெறும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும். ‘அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்’ என்ற தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பேராசிரியர், ‘கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும்’ என்று உரை எழுதியுள்ளமையை நோக்க இரண்டு உண்மைகள் புலனாகின்றன. அவை, கிடைக்காமல் போன முழு முத்தொள்ளாயிர நூலிலும் கைக்கிளைப் பாடல்கள் மிகுதி என்பதும் இவ்வகைப் பாடல்களைக் கைக்கிளை எனப்பாகுபாடு செய்வதே மரபு என்பதுமாகும்.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்,

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொல். புறத். 28)

என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் பாடாண் திணை கூறும் கைக்களைப் பொருண்மை உடையது. இந்நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், “இக்காமப் பகுதி எழுதிணைக்குரிய காமமும், ‘காமஞ் சாலா இளமையோள் வயின்’ காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க” என்கிறார். இவ்வுரையின் வழிப் பாடாண் திணைக் கைக்கிளை என்பது அகம் எழுதிணையின் முதலில் இடம்பெறும் கைக்கிளையோ, கைக்கிளைக் குறிப்போ அன்று என்பதும் இது வேறு ஒரு கைக்கிளை, அதாவது புறப்பொருள் கைக்கிளை என்பதும் பெறப்படும். எனவே, பெண்களின் காமப்பகுதியைக் கூறும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களே என்பது பெறப்படும். நூற்பாவில் இடம்பெறும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதற்கு விளக்கமளிக்கும் நச்சினார்க்கினியர், “கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவும் கொள்க” என்பார். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பாட்டுடைத் தலைவர்களாக மட்டுமன்றிக் கிளவித் தலைவர்களாவும் வந்துள்ளமையைக் காணமுடியும்.

உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் புனையப்பட்டுள்ள முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இடைக்காலத்தில் எழுந்த பல அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கு வித்தாக அமைந்தமை இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். பக்தி இலக்கியங்கள் புனைந்து காட்டும் நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களுக்கும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் உள்ள தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முத்தொள்ளாயிரத்தின் காலத்தைச் சரியாக வரையறுத்தால் மட்டுமே இக் கைக்கிளை மரபைப் பக்தி இலக்கியங்களிடமிருந்து முத்தொள்ளாயிரம் பெற்றதா? அல்லது முத்தொள்ளாயிர இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியங்கள் பெற்றனவா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எப்படியாயினும் இரண்டிலும் செயல்படும் அகப்பொருள் படைப்பாக்க உத்தி என்பது ஒன்றே.

முடிப்பாக:

இலக்கியச் சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களின் நயத்தினை வியத்தலும், பண்பாட்டுச் செய்திகளைத் திரட்டலும், அணிநலன்களின் அழகை வெளிப்படுத்தலும் எனப் பல நிலைகளில் முத்தொள்ளாயிரப் பாடல் குறித்த திறனாய்வுகள் விரிக்கின் பெருகும் சிறப்புடையன. மாறாக, இக்கட்டுரை முத்தொள்ளாயிரம் குறித்த சில விளக்கங்களை முன்னோர் கருத்துக்களை ஒட்டியும் உறழ்ந்தும் முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,

1. முத்தொள்ளாயிரம் எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது
2. தொள்ளாயிரம் என்ற எண்ணிக்கையால் பெயர் பெற்ற இலக்கிய வகைகளில் முத்தொள்ளாயிரமும் ஒன்று.
3. இந்நூல் விருந்து என்ற வனப்பு வகையால் பாடப்பட்டது.
4. முத்தொள்ளாயிரத்தின் பாடல் எண்ணிக்கை 2,700 அன்று.
5. முத்தொள்ளாயிரம் என்பது மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் எனப் பொருள்படும்.
6. முத்தொள்ளாயிரம் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டிருக்கலாம்.
7. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரதேவ நாயனாராக இருக்கலாம் என்ற சேதுரகுநாதன் அவர்களின் கருத்து ஆய்விற்குரியது.
8. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும்.
9. முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.
10. பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம், புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளது இந்நூல்.
11. முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் தொல்காப்பியப் பாடாண் திணை கூறும் பெண்பாற் கைக்கிளை மரபினைச் சார்ந்தது.
12. பக்தி இலக்கிய நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...