Wednesday 4 May 2011

தமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதச்சேரி-8

தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரையாசிரியர்களின் உரைப்பகுதிகளிலும் பரக்கக் காணலாம். "மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே" என்று தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு தமிழரின் ஆய்வு அணுகுமுறையின் ஒரு கூறு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணுவதும் பாடலுள் பயின்றவை நாடுவதும் ஒருவகை ஆய்வு அணுகுமுறையே. திருவள்ளுவர் குறிப்பிடும் நவில்தொறும் நூல் நயமும், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலும் ஆய்வு அணுகுமுறைகளே. இடைக்கால இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள், அனைவரும் ஆய்வாளர்களே. ஆங்கிலக் கல்வி நம்மிடம் இயல்பாக, மரபாக அமைந்திருந்த ஆய்வு மனப் பான்மையை கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழாய்வு சிறிய அளவில் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களாலும் பெரும்பான்மை நிறுவனம் சாராத கல்வியாளர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி பல்கலைக் கழகங்களின் பெருக்கத்தாலும் ஆய்வுப் படிப்புகளின் நெருக்கத்தாலும் தமிழாய்வு பெரிதும் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களையே சார்ந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. கல்வியாளர் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு சிறுபத்திரிக்கை வட்டங்களிலும் சில சுதந்திர ஆய்வாளர்களாலும் தமிழாய்வு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளமை நிறைவளிக்கக் கூடியதே.

கடந்த பத்தாண்டுகளில் கல்விப்புலம் சார்ந்து நடத்தப்பெறும் ஆய்வரங்குகள் பெருகியுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் பல அரசு, தனியார் கல்லூரிகளும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள் பலவும் சிற்றிதழ்கள் சார்ந்தும் இவ்வகை ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. இவ் ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் நூலாக்கம் பெருகின்றன. இன்னும் சிலகாலம் கழித்து இவ்வகை ஆய்வரங்குகளின் ஆய்வுகள் மதிப்பிடப்படும். தமிழாய்வுக்கு உண்மையிலேயே இவ்வகை ஆய்வரங்குகளின் பங்களிப்பு யாது? என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படும். அல்லன நீக்கி நல்லன பாதுகாக்கப்படும்.

அண்மைக் காலங்களில் தமிழாய்வு மேலை இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் பலவற்றையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ளது. புதிய புதியத் துறைகள் புதிய புதிய அணுகுமுறைகள் தமிழாய்வை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் நமக்கு எள் அளவும் ஐயமில்லை. அதே சமயம் தமிழின் மரபார்ந்த ஆய்வு அணுகுமுறைகளையும் நாம் மீட்டெடுத்தல் அவசியம்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...