Friday 6 April 2012

மலர் நீட்டம் நூலுக்கான முன்னுரையின் ஒருபகுதி

Dr.N.Ilango
Associate Professor
Dept.of Tamil
P.G. Centre,
Govt. of Puducherry
Puducherry-8

முனைவர் நா.இளங்கோ

ஐரோப்பியர் வருகையும் அச்சு இயந்திரத்தின் அறிமுகமும் தமிழ்க் கல்விப் புலத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தன. உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமாயிருந்த கல்வியை அனைத்துச் சமூகத்தினருக்குமான கல்வியாக விரிவு படுத்தியதில் ஐரோப்பியர் களுக்குக் கூடுதல் பங்களிப்புண்டு. ஏடுகளில் ஒடுங்கிக்கிடந்த தமிழ் இலக்கியங்கள் அச்சு வாகனம் ஏறிப் பழந்தமிழர் பெருமைக்குக் கட்டியம் கூறியதில் அச்சு இயந்திரங்களின் அறிமுகத்திற்கு முக்கிய இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அச்சாக்கம் பெறத் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் முழுமைபெற்றன. 1857 இல் வெளியான கால்டுவெல்லாரின்  ஒப்பிலக்கண அறிமுகம் தமிழ்மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்திற்று. 1921இல் சிந்து சமவெளி ஆய்வுகள் வெளிவந்தன. உலகோர் வியந்து போற்றும் இச்சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழருடையது என்ற ஆய்வு முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

ஆக வடமொழியும் ஆரியப் பண்பாடும்தாம் இந்தியத் திருநாட்டின் முகவரி என்று கருதிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் பழந்தமிழர் இலக்கண இலக்கியங்களின் மறுவருகையும், தமிழ்மொழியின் தொன்மை குறித்த ஆய்வு முடிபுகளும் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனக் கண்டறியப்பட்டதும் ஆன அடுத்தடுத்த நிகழ்வுகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு களில் தமிழ் மறுமலர்ச்சி தோன்றுவதற்கு வித்திட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழைச் செம்மொழி என்று அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். செந்தமிழ் மாத இதழில் 1902 ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘உயர்தனிச் செம்மொழி’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் முதன்முதலாகத் தமிழை உயர்மொழி, தனிமொழி, செம்மொழி என மதிப்பிட்டுத் தமிழே உயர்தனிச் செம்மொழி என்பதனைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவினார். 1902 ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் தொடங்கிவைத்த செம்மொழி உரிமைப் போர், தமிழறிஞர்களின் தொடர்ச்சியான பல கோரிக்கைகள், தீர்மானங்கள், போராட்டங்களின் விளைவாக 2004 அக்டோபர் 12 இல் வெளியிடப்பட்ட இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பால் வெற்றியாய் முடிந்தது. தமிழர்களின் நூறாண்டுக் கால மொழி உரிமைப் போரின் தளபதி பரிதிமாற் கலைஞர். அவரின் முழக்கமே இந்தச் செம்மொழி உரிமைப் போரின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தது.

2004 இல் இந்திய நடுவணரசு சான்றளித்த தமிழ் செம்மொழி என்ற தகுதி தமிழாய்வுலகில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தம் செல்வாக்கை இழந்தன. சங்க இலக்கியங்களைக் குறித்துப் பேசுவோர், எழுதுவோர், ஆய்வு செய்வோர் குறைந்தனர். தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பு, மீண்டும் சங்க இலக்கியங்களுக்குப் புத்துயிர்ப்பு அளித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் (2005- 2011) தமிழில் வெளிவந்த ஆய்வுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளே பெரும்பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கியப் பதிப்புகள், உரைகள், அறிமுக நூல்கள் எனத் தமிழ்ப் பதிப்புலகம் மீண்டும் சங்க இலக்கியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ஆய்வு மாணவர்கள் சங்க இலக்கியத் தலைப்புகளில் ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நோக்கம் எப்படியிருப்பினும் இந்த மாற்றம் மகிழ்வளிக்கக் கூடியதே. மீண்டும் தமிழ் மறுமலர்ச்சி யுகம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலர் நீட்டம் என்ற இக்கட்டுரைத் தொகுப்பு நூலும் செம்மொழி இலக்கியங்கள் குறித்த ஆய்வு நூலே. இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் செம்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்யும் பணியை மலர் நீட்டமும் மேற்கொள்கின்றது.
II

நான் பல்வேறு சூழல்களில் எழுத்துரையாக எழுதி வாசித்த கட்டுரைகளைத் திரட்டித் தமிழ் இணர் என்ற பெயரிலும் படர்க்கை என்ற பெயரிலும் படைத்தளித்த இரண்டு நூல்களும் தமிழாய்வுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றன. புதுச்சேரி பட்டமேற்படிப்பு மையம் அமைத்துத் தந்த நல்ல ஆய்வுச் சூழலால் சாத்திமானது அது. இரண்டு ஆய்வுத் தொகுப்பு நூல்கள் தந்த உற்சாகத்தில் மூன்றாவது நூலை உருவாக்கியுள்ளேன். செம்மொழி இலக்கியங்கள் சிலவற்றைக் குறித்து இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வௌ;வேறு சூழல்களில் நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளேன். மலர் நீட்டம் என்பது இக்கட்டுரைத் தொகுப்பு நூலின் பெயர். உருவகக் குறியீடாக அமைக்கப் பட்டுள்ள பெயர். இந்த நூலில் பத்துக் கட்டுரைகள் உள்ளன.

இலக்கிய வரலாற்று நோக்கில்..
1. குறுந்தொகை                           
2. பொருநராற்றுப்படை                           
3. முல்லைப்பாட்டு                            
4. முத்தொள்ளாயிரம்                           
ஆய்வு நோக்கில்..
5. பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு
-கொற்றவை வழிபாட்டை முன்வைத்து               
6. சங்க அகப்பொருள் மரபுகள்
-நாட்டுப்புறக் காதல் பாடல்களை முன்வைத்து           
7. பாலியல் அறமும் பரத்தையரும்                   
8. பழந்தமிழர் ஈகைக் கோட்பாடு                    
9. ஒளவை துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)       
சிறப்புக் கட்டுரை
10. செம்மொழி அறிஞர் பரிதிமாற் கலைஞர்   
           
நூலின் பத்துக் கட்டுரைகளில் கடைசிக் கட்டுரை நீங்கலாக மற்ற ஒன்பது கட்டுரைகளும் செம்மொழி இலக்கியங்கள் தொடர்பானவை. அந்த ஒன்பது கட்டுரைகளில் முதல் நான்கு கட்டுரைகளும் இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் படைக்கப் பட்டுள்ளவை. அடுத்த ஐந்து கட்டுரைகளும் ஆய்வு நோக்கிலானவை. பத்தாவதாக இடம்பெற்றுள்ள சிறப்புக் கட்டுரை தமிழின் செம்மொழித் தகுதியினை உலகுக்கு உணர்த்திய முதல் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றியது. செம்மொழி இலக்கியங்கள் தொடர்பான இந்நூலில் பரிதிமாற்கலைஞரைச் சிறப்பிக்கும் விதத்தில் இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. 

கட்டுரைகள் ஒவ்வொன்றும் உருவான சூழல்கள் வேறுவேறானவை. எனவே கட்டுரையின் பக்க அளவுகளில் ஒரு சீர்மை அமையவில்லை. ஆய்வு நோக்கில் மட்டுமின்றி இலக்கிய மாணவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் விரும்பிப் படிக்கத் தக்க மொழிநடையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஆய்வுக் கட்டுரைகள் என்றாலே இறுக்கமான மொழிநடையில் தான் இருக்கவேண்டும் என்று நான் நம்புவதில்லை.  ஆய்வரங்கு மற்றும் கருத்தரங்குகளில், எழுதிவந்த கட்டுரையை எழுத்துவிடாமல் வாசிப்பவர்கள் பலருண்டு. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை. எழுத்துரையைக் கையில் வைத்துக்கொண்டு கட்டுரையின் பொருளை எளிய இனியநடையில் விளக்கிப் பேசுவது என்பாணி. எப்பொழுதும் வெற்றிபெறும் சூத்திரம் அது. பேச்சின் அந்த எளிமையையும் இனிமையையும் கட்டுரையில் அப்படியே கொண்டுவர முன்றிருக்கிறேன். வெற்றிபெற்றேனா? இல்லையா? என்பதை நீங்கள்தாம் சொல்லவேண்டும். பேனா பிடித்து எழுதுவதில் எனக்குள்ள சிக்கல், தட்டச்சும் தெரியாது என்றாலும் ஒரே விரலால் நானே தட்டச்சு செய்து உருவாக்கும் நூல்கள் என்னுடையவை. ஒவ்வொரு கட்டுரையையும் உருவாக்குவதில் எனக்குள்ள தனிப்பட்ட சிரமங்கள் அத்தனையும் அந்தக் கட்டுரைகள் கற்றோர் அரங்கில் அரங்கேறும்போது சூரியன் முன் பனித்துளிபோல் காணாமல் போய்விடும். அந்த உற்சாகத்தில்தான் நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.

  
முனைவர் நா.இளங்கோ
9943646563

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...