Sunday 21 November 2010

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள்

இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எண் செய்யுள் சிற்றிலக்கியம்:

முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்.
(இ.வி.பாட்டியல், நூ.88)

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்
எண்செய்யு ளாகு மன்றே
(பிரபந்த தீபிகை, நூ.14)

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)

ஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
(தொல். செய்யுளியல் நூ. 551)

பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.

கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:

முத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)

என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா?

இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.

எண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)

இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.

முத்தொள்ளாயிரத்தின் காலம்:

முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.

முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.

‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...