Wednesday 30 December 2009

சீர்திருத்தம் பேசிய தேசியவாதி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-4

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சீர்திருத்தம் பேசிய தேசியவாதி

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி இந்நாவலை எழுதி வெளியிட்ட ஆண்டு 1931 ஆகும் சற்றேறக்குறைய இக்காலக்கட்டத் தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் இரண்டு வகையான இயக்கங்கள் தோன்றிச் செயலாற்றிக் கொணடிருந்தன. ஒன்று, தேச விடுதலையை மையமிட்ட தேசிய இயக்கம், மற்றொன்று சமூகச் சீர்த்திருத்தங்களில் மையம் கொண்ட திராவிட இயக்கம்.

முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் தமிழகத்தில் தோன்றிய அனைத்துப் படைப்பிலக்கியங்களிலும் இவ்விரண்டு இயக்கப்போக்குகளின் தாக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தமை கண்கூடு. தீவிர அரசியல், தீவிர இயக்கம், தீவிரப் படைப்பாக்கங்களில் செயல்படுவோர் என்ற இத்தகு தீவிரப் போக்குடையவர்களிலிருந்து மாறுபட்டுத் திரைத்துறை சார்ந்து இயங்கும் ஒருவர், அதிலும் ஆதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கத்தினரின் மேய்ச்சலுக்காக மட்டுமே பெண்ணும் பெண்ணின் உடலும் என்று இன்றுவரை இயங்கிவரும் திரைப்படத்துறையில் ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக, படைப்பாளியாக டி.பி.ராஜலட்சுமி வெளிப்பட்டமை வியந்து பாராட்டுதற்குரியது.

காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவராக மேடைகளில் தோன்றி தேசபக்திப் பாடல்களைப் பாடி தேசவிடுதலைக்கு எழுச்சியூட்டும் பணியாற்றி வந்த டி.பி.ராஜலட்சுமி படைப்பிலக்கியத் துறையில் குறிப்பாக நாவல் இலக்கியத்தில் செயலாற்றும் போது முற்றமுழுதாகச் சீர்திருத்த இயக்கக் கருத்தாக்கங்களை உள்வாங்கிப் படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளமை ஓர் அழகிய முரணாகும்.

டி.பி.ராஜலட்சுமியின் அனுபவ வழிப்பட்ட சீர்திருத்தம்

மாயூரம் வேதநாயகர் தொடங்கி டி.பி.ராஜலட்சுமி காலம் வரையிலும் படைப்பிலக்கியங்களில் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்விடுதலை முதலான கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டுவந்தன. படைப்பிலக்கியங்கள் எனும்போது கவிதை இலக்கியங்கள், புனைகதை இலக்கியங்கள் இரண்டிலும் இப்போக்கு காணப்பட்டது. நாவல் படைப்பதற்கு முன்பே, கவிதை இலக்கியங்களில் மேலே சொல்லப்பட்ட உள்ளடக்கங்களைத் தெளிந்த சிந்தனையோடு பதிவுசெய்ததில் முதன்மையானவர் மாயூரம் வேதநாயகரே. அவரைத் தொடர்ந்தே பாரதி, பாரதிதாசன் முதலான கவிஞர்கள் பெண்விடுதலை குறித்துப் பேசத்தொடங்கினர்.

வேதநாயகர் எத்தகைய இயக்கப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலக் கல்வி தந்த அறிவு வெளிச்சத்தில் பெண்விடுதலை பேசினார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பெண்விடுதலை பேசியதில் இயக்கப் பின்னணிகள் இருந்தன. புனைகதைகளில், குறிப்பாக நாவல்களில் பெண்விடுதலை பேசப்பட்டபோது ஆங்கிலக் கல்வி, மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கம் குறித்த விழிப்புணர்வின் விளைவாகவே பெண் விடுதலைச் சிந்தனைகள் பேசப்பட்டன. மாயூரம் வேதநாயகர் தொடங்கி, தொடக்கக்கால நாவல் வரலாற்றில் இப்போக்கினை நாம் காணலாம்.
நாவலாசிரியை டி.பி.ராஜலட்சுமியின் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் மேலே சொல்லப்பட்ட கோணங்களிலிருந்து மாறுபட்டவை.

டி.பி.ராஜலட்சுமியின் முறைசார் கல்வி இரண்டாம் வகுப்புவரைதான், மற்றபடி அவரின் எழுத்தறிவு, புலமை எல்லாம் அனுபவ வழிப்பட்டதே. ஆங்கிலக் கல்விக்குப் பெரிதும் வாய்ப்பில்லை. எனவே டி.பி.ராஜலட்சுமியின் பெண்விடுதலைச் சிந்தனைகளுக்குக் களம் அமைத்தவை அவரின் வாழ்க்கைப் பேராட்டங்களும், அனுபவங்களுமே எனல் பொருந்தும். அதிலும் தம் முதல் நாவலான கமலவல்லியில் அவர் எடுத்துக்கொண்ட பிரச்சனை, பெண்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றியதாயிருப்பது தனித்தன்மை உடையது.

இருபதாம் நூற்றாண்டின்; தொடக்ககாலப் படைப்புகள் மிகுதியும் பேசிய பெண்கல்வி, கைம்பெண்டிர் மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு போன்ற உள்ளடக்கங்களிலிருந்து மாறுபட்டு, ஒருபெண் விருப்பமின்றி வேறு ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும் அப்பெண் அத்திருமண வாழ்வில் ஈடுபடாமல் திருமணம் செய்துகொண்ட கணவனின் துணையோடு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தன்னுடைய காதலனையே மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக நாவலைப் படைத்துள்ளமை டி.பி.ராஜலட்சுமியின் புரட்சிகரமான சிந்தனைக்குச் சான்றாகிறது.

கணவன் இறந்தபிறகு பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வலியுறுத்தும் விதவைத் திருமணம் போன்ற மரபு மீறல்களிலிருந்து டி.பி.ராஜலட்சுமி தம் நாவலில் கையாண்ட மரபு மீறல் முற்றிலும் புதுமையானது. கணவன் உயிருடன் இருக்கும்போதே ஒருபெண் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்வது. பலர் அறிய மறுமணம், அதுவும் கணவனின் துணையோடு. இவ்வுள்ளடக்கம் அவர் காலத்தில் புதிது, புதுமையானது.
இத்தகு புதிய மரபு மீறலுக்கான நியாயங்கள் நாவலில் பேசப்படுகின்றன. நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி, நாவலில் ஆசிரியர் கூற்றாக இவ்விவாதங்களைப் பதிவுசெய்யாமல் பாத்திரங்களின் கூற்றாகவே பதிவு செய்திருப்பது அதன் கட்டுக்கோப்பில் வெகுஇயல்பாகப் பொருந்திக் கொள்கிறது.

கமலவல்லியின் மறுமணத்திற்கு உடன்படும் அவளின் கணவன் டாக்டர் சந்திரசேகரனிடம் இப்பிரச்சனை குறித்துத் தீவிரமாக விவாதிக்கின்றார் பாரிஸ்டர் பகதவச்சலம். அவ் உரையாடலின் ஒருபகுதி பின்வருமாறு,

பாரிஸ்டர்: உங்களுக்குக் கமலவல்லியின் நடத்தைகள் பிடிக்காமல்தானே! இப்போது அவளுடைய நிர்ப்பந்தத்திற்காக அவள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டுமென்று அனுமதிக்கின்றீர்கள்?

டாக்டர்: கமலவல்லி வெறுக்கத்தக்க குணங்களுள்ளவளல்ல. இன்னும் பார்த்தால் குணவிசேடங்களிலும் மதிநுட்பத்திலும் அவள் மிக மேம்பாடானவள். கல்யாண விஷயத்தில் ஆணாயிருந்தாலும் சரியே, பெண்ணாயிருந்தாலும் சரியே, அவரவர் தத்தம் மனசாட்சியின்படி சர்வசதந்திரமாய் நடக்க விட்டுவிடுவதே மேன்மையாகும். இந்த விசாலமான நோக்கத்தினாலேயே நான் கமலவல்லி மறுபடியும் கண்ணப்பனை விவாகம் செய்துகொள்ள என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 107)

பாரிஸ்டர்: பகிரங்கமாய் ஒருவரை மணம் செய்துகொண்ட ஒரு பெண், வேறொருவருடன் வாழ்ந்திருக்கும்படி செய்வது முறையாகுமா?

டாக்டர்: ஏன் முறையாகாது? விவாகமென்பதே ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கையை முன்னிட்டுச் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தந்தானே. நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது?

குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாபமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 108-109)

டாக்டர் சந்திரசேகரனின் கருத்துக்களாக வெளிப்படுவது நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் குரலே. உடல் வலிமையாலும் அறிவாலும் எல்லாவகையிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருபடி தாழ்ந்தவர்களே என்ற கருத்து வலிமை பெற்றிருந்த ஒரு சமூகத்தில் “பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப்படுத்துகிறோம்.” என்ற நாவலாசிரியரின் எதிர்க்குரல் எத்துணை அழுத்தமாகவும் உரத்தும் ஒலிக்கின்றது.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து, “பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.” என்று நாவலாசிரியர் பேசுவது பெண்ணடிமைச் சமூகம் பற்றிய அவரின் தார்மீகக் கோபத்தின் உச்சம் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

Tuesday 22 December 2009

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி -சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி:

“தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” நூலை எழுதிய பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல் படைப்புகளைப் போகிறபோக்கில் பின்வருமாறு (ப. 144)சுட்டிச் செல்கின்றனர்.

“அதே ஆண்டில் (1931) மற்றொரு பெண்மணி தென்னிந்திய நாடக மேடைகளிலும் சினிமா காட்சிகளிலும் பிரசித்தி பெற்ற டி.பி. ராஜலட்சுமி, “கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் சமூக முன்னேற்றக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கமலவல்லியை டாக்டர் சந்திரசேகரன் காதலிப்பதும் உமையப்பன் என்ற தீயவனால் பல இடையூறுகள் ஏற்படுவதும் பின்னர் பிறர் உதவியால் யாவும் சுபமாய் முடிவதும்தான் கதை. ஆனால் இந்த நாவலின் பின்அட்டையில் காணப்படும் விளம்பரத்தில், ‘இது அனுபவ ஞானக் கலா விலாசங்கள் நிறைந்திலங்கும் அமிர்தச் சுவையுள்ள அழகிய தமிழ் நாவல்’ என்று காணப்படுவதால் ஆசிரியை வளர்ந்த சூழ்நிலையின் சமகாலச் சமூகச் சித்திரம் என்றுதான் கொள்ளப்படலாம். இவர் மற்றும் ஐந்து நாவல்கள் எழுதியதாக ஒரு விளம்பரம் குறிப்பிடுகிறது.”
சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகிய இந்நூலாசிரியர்கள் மறவாமல் டி.பி.ராஜலட்சுமியை ஒரு நாவலாசிரியராகப் பதிவு செய்துள்ளமை காலத்தினால் செய்த உதவியாகும்.

இந்நூலைத் தவிர நாவல் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரலாற்று நூல்கள் மற்றும் நாவல் விளக்க நூல்கள் எவற்றிலுமே டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல்கள் குறித்த பதிவு இடம்பெறாதது ஒரு வரலாற்றுச் சோகமே. (என்னுடைய பார்வை எல்லைக்குட்பட்ட நூல்களில்)

இணையதள தமிழ் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/wiki/- “டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகையும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். --- --- ராஜலட்சுமி எழுதிய முதல் புதினம் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்பதாகும். விமலா, மல்லிகா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் ஆகியவை இவர் எழுதிய மற்ற நாவல்கள்”
என்று குறிப்பிட்டுள்ள செய்தி நாவல் ஆய்வாளர்களுக்கும் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் அரிய செய்தியாகும்.

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்:

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் முதல் நாவல் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் ஆகும். இவர் இந்நாவலைத் தம் இருபதாவது வயதில் எழுதியுள்ளார். டி.பிராஜலட்சுமி கதாநாயகியாக நடித்துத் தமிழின் முதல் பேசும்படம்; வெளிவந்த அதே ஆண்டில் (1931) டி.வி. பாலகிரு~;ண நாயுடு என்பவரால் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள்’ என்ற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சென்னை ஆவணக் காப்பகத்தில் நூல்களைத் தேடித் திரட்டியபோது இந்நூலைக் கண்டெடுத்ததாகவும் பின்னர் இந்நாவலின் தனித்தன்மைகளை உணர்ந்து புலம் பதிப்பகத்தின் வழியாக இந்நாவலைப் பதிப்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார் இந்நூலின் புதிய பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள்.

புதிய மறுபதிப்பு

டி.பி.ராஜலட்சுமி
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
பதிப்பாசிரியர் ப.பத்மினி
புலம் வெளியீடு
மதுரவாயல், சென்னை- 95
முதல்பதிப்பு மார்ச் 2009

என்ற பதிப்புத் தகவல்களோடு வெளிவந்துள்ளது.

இந்நூலின் பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள் இந்நாவலின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது,

“திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களில் இவரைத்தவிர இலக்கிய உலகில் வேறு யாரும் பிரவேசித்ததுபோல் தெரியவில்லை. இவருக்குப் பின்வந்த திரைப்படப் பெண் நடிகர்களில் பலர் தம்முடைய வாழ்க்கையைப் பத்திரிக்கைகளில் தொடர்களாக மட்டுமே வெளியிட்டனரேயன்றி இவரைப் போன்று சமூக உணர்வுடன் கூடிய இலக்கியப் படைப்பை அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த இவரின் படைப்போ சமூக உணர்வுடன் கூடியதாக இருப்பதைக் காணலாம்.”
(ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக் 9-10)

என்று குறிப்பிடுவதோடு இந்நூலை மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவதற்கான காரணங்களாகப் பதிப்பாசிரியர் ப.பத்மினி இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.

ஒன்று, கலைப்பட்டறையில் வாழ்ந்திருந்தாலும் யதார்த்தத்தில் சிந்திக்கும்போது அன்றைய பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிகவும் துணிச்சலோடு இப்படைப்பைப் படைத்திருப்பது வியப்புக்குரியது.

இரண்டு, இந்திய விடுதலைக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பலர் எழுதிய படைப்புகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியவையாக இருந்துள்ளன. சில படைப்புகள் சமூக மாற்றங்களை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்துள்ளன. இது குறித்துப் பெரிதாகப் பதிவுகள் செய்யப்படவில்லை. இந்நாவல் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கும் (ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக். 10-11)

நூலமைப்பு:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இரட்டைத் தலைப்பிடும் முறை வழக்கத்திலிருந்தது. பத்திரிக்கைகளில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் தொடங்கி, நாவல் தலைப்புகள், சிறுகதைத் தலைப்புகள், நூலின் தலைப்புகள், திரைப்படத் தலைப்புகள் என அனைத்துத் தலைப்புகளும் இரண்டிரண்டாக இடப்படுவது வழக்கம். முதல் தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடையே அல்லது என்றசொல் இடம்பெறும். இம்மரபைப் பின்பற்றி இந்நாவலுக்கும் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என இரட்டைத் தலைப்பு இடப்பட்டுள்ளது.

நாவல் பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாத்திற்கும் நாவலாசிரியராலேயே பொருத்தமான கவித்துவமிக்க தலைப்பிடப்பட்டுள்ளது. (காட்டேரியும் கருப்பண்ணசாமியும், சுவர்க்கவாசலும் அம்பிகைசேனையும், பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்பன போன்ற தலைப்புகள்) முதல் நான்கு பகுதிகள் மட்டும் அதிகாரம் என்ற பெயரிலும் ஐந்துமுதல் பதினாறு வரையிலான பகுதிகள் அத்தியாயங்கள் என்ற பெயரிலும் பகுக்கப்பட்டுள்ளன.

நாவலின் கதைப் பாத்திரங்கள்:

கமலவல்லி - கதைத் தலைவி
கண்ணப்பன் - கமலவல்லியின் காதலன்
மகாலிங்கம் - கண்ணப்பனின் நண்பன்
டாக்டர் சந்திரசேகரன் - கமலவல்லியின் கணவன்
பத்மாசனி - கண்ணப்பனின் தமக்கை
பாரிஸ்டர் பக்தவசலம் - பத்மாசனியின் கணவர்
செல்வாம்பாள் - பாரிஸ்டர், பத்மாசனி இவர்களின் மகள்
சோமசுந்தரம் பிள்ளை - கமலவல்லியின் வளர்ப்புத் தந்தை
மாணிக்கவல்லி - கமலவல்லியின் வளர்ப்புத் தாய்
உமையப்பன் - கமலவல்லியை விலைபேசும் முரடன்

கதைச் சுருக்கம்:

இந்நாவலின் கதைத்தலைவி கமலவல்லியும் கண்ணப்பனும் காதலர்கள். கமலவல்லியின் வளர்ப்புப் பெற்றோர் ரூபாய் 5000 பணம் பெற்றுக் கொண்டு அவளை டாக்டர் சந்திரசேகரனுக்கு வலிந்து மணம் செய்து வைக்கின்றனர். முதலிரவில் கமலவல்லி டாக்டர் சந்திரசேகரனிடம் தான் கண்ணப்பனைக் காதலிக்கும் செய்தியைச் சொல்லி கண்ணப்பனோடு தன்னைச் சேர்த்துவைக்க வேண்டுமென்று வேண்டுகிறாள். சந்திரசேகரனும் உடன்படுகிறான். மீண்டும் வளர்ப்புப் பெற்றோர் வசம்வந்த கமலவல்லியை உமையப்பன் என்ற முரடன் ஒருவனுக்கு மணம்முடிக்க அவர்கள் முயற்சி செய்ய, கமலவல்லி அவ்வீட்டைவிட்டுத் தப்பிவந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.

அவளைக் காப்பாற்றித் தம் வீட்டில் அடைக்கலம் தருகின்றனர் பாரிஸ்டர் பக்தவச்சலமும் அவரது துணைவியார் பத்மாசனியும். பாரிஸ்டர் பத்மாசனி இணையரின் முயற்சியால் டாக்டர் சந்திர சேகரனின் துணையோடு கமலவல்லி கண்ணப்பன் திருமணம் பல போராட்டங்களுக்கிடையே நடந்தேறுகிறது. டாக்டர் சந்திரசேகரன் பாரிஸ்டர் மகள் செல்வாம்பாளைக் காதலித்து மணமுடிக்கிறார்.

காதலித்தவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள் ஒருபெண். அவள் கணவன் தன்மனைவி வேறு ஒருவனின் காதலி என்பதை அறிந்தவுடன் அவளின் காதலனுக்கே அவளை மணமுடித்து வைப்பதாகச் சொல்லும் புதுமையான கருத்தே கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலின் கதைக்கரு.

Monday 21 December 2009

தமிழின் முதல் பெண் இயக்குநர் - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

முதல் பெண் இயக்குநர்:

1931 தொடங்கி 1950 வரை தொடர்ந்து இருபத்திரண்டு படங்களில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானதாகக் காளிதாஸ் (1931), கோவலன் (1933), வள்ளித் திருமணம் (1933), குலேபகாவலி (1935), ஹரிச்சந்திரா (1935), மிஸ்.கமலா (1936), நந்தகுமார் (1939), மதுரை வீரன் (1939), ஜீவஜோதி (1947), இதயகீதம் (1950) போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

காளிதாஸைத் தொடர்ந்து 1932 இல் ராமாயணம் என்ற படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்தார். இப்படத்தில் டி.எஸ். மணிக்கு இராமன் வேடம். டி.பி.ராஜலட்சுமிக்கு சூர்ப்பனகை, சீதை என்று இரண்டு வேடம். ஒரே படத்தில் முதன்முதலில் இரண்டு வேடங்களில் தோன்றி மக்களை அதிசயிக்க வைத்த பெருமையும் இவருக்கே உண்டு.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து, பாடி, பேசி வெற்றிக்கொடி நாட்டிய டி.பி. ராஜலட்சுமி 1936 இல் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிமாணங்களோடு மிஸ். கமலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். மிஸ். கமலா திரைப்படத்தின் கதாசிரியரும் அவரே, அவரே திரைக்கதை அமைத்து உரையாடல்களையும் எழுதினார். இப்படத்திற்கான பாடல்களை எழுதியதோடு கதாநாயகி வேடமேற்று பாடி, நடிக்கவும் செய்தார். டி.பி.ராஜலட்சுமியே தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர். முதல் பெண் இயக்குநர்.

மிஸ். கமலா திரைப்படத்திற்கு

நடிப்பு
பாடகர்
பாடலாசிரியர்
கதை
திரைக்கதை
உரையாடல்
இயக்கம்
தயாரிப்பு

ஆகிய பல பணிகளை ஏற்றுத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாகத் திறம்படச் செயல்படுத்திக் காட்டிய பெருமை டி.பி.ராஜலட்சுமி அவர்களையே சாரும். 1936 லேயே இந்திய, தமிழகத் திரைப்பட உலகின் சகலகலாவல்லி என்ற பெரும்புகழ் பெற்றவர் அவரே. தமிழ்த்திரையுலகம் அவரைச் சினிமா ராணி எனக் கொண்டாடியது.

இந்தச் சாதனை குறித்து 1956 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா இதழின் தீபாவளி மலரில் டி.பி.ராஜலட்சுமி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு.

“இப்படி ஆரம்பமான எனது நட்சத்திர வாழ்க்கைத் தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ‘வள்ளி’ எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டுத் தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு பழக்கம் எனக்கு ஏற்பட்டிராது. அந்தச் சமயத்தில்தான் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் மிஸ். கமலா. அதன் கதை, வசனம், பாடல்கள், டைரக்~ன் அனைத்தையுமே நான்தான் கவனித்துக் கொண்டேன். தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களையும் தயாரித்தேன்.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக் 95-96)

அனுபவத்தையே ஆசானாகக் கொண்டு சாதித்துக் காட்டிய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற திரைப்படம் சார்ந்த ஆளுமைகளுக்கு வெளியே ஒரு சிறந்த படைப்பாளியாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது தமிழிலக்கிய உலகில் மறக்கப்பட்ட செய்தி.

Sunday 20 December 2009

சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:
தமிழ்த் திரைப்படங்கள் பேசத்தொடங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை தமிழின் முதல் பேசும்படம் வெளியானது. திரைப்படத்தின் பெயர் காளிதாஸ்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சுதேசமித்திரன் இதழில் வெளியான காளிதாஸ் திரைப்பட விளம்பரம் இது.

கினிமா சென்டிரல்
1931-ம் வருஷம் அக்டோபர் மாதம்31-ம் தேதி சனி முதல்
தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட
முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள்
மிஸ். டி. பி. ராஜலட்சுமி நடிக்கும்
“காளிதாஸ்”
முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி
இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது
உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள்
பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்

(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, ப.41)

இத்திரைப்பட விளம்பரத்தில் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ் என்று விளம்பரப்படுத்தப் பட்டிருப்பதைக் கவனித்தால் தமிழ்த்திரைப்பட உலகுக்கும் டி.பி.ராஜலட்சுமிக்கும் உள்ள தொப்புள்கொடி உறவுபுரியும். வழக்கமாகக் கதாநாயகர்களைக் கொண்டே திரைப்படங்கள் விளம்பரப் படுத்தப்படும் மரபை மீறித் தமிழின் முதல் திரைப்படமே கதாநாயகியை முன்னிறுத்துவது கவனத்திற்குரியது. அதற்குக் காரணம், காளிதாஸ் முதல் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்ல முதல் தெலுங்குத் திரைப்படமும் கூட. இப்படத்தில் கதாநாயகி வித்யாதரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசுவாள், பாடுவாள். கதாநாயகன் காளிதாசன் தெலுங்கில் பேசுவான், பாடுவான். வேறு சில துணைப் பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள்.

ஆக முதல் தமிழ்ப்படத்தில் உருப்படியாகத் தமிழில் பேசி, பாடியவர் டி.பி.ராஜலட்சுமிதான். எனவே தமிழ்த்திரைப்பட வரலாறு டி.பி.ராஜலட்சுமியிலிருந்துதான் தொடங்குகிறது.
1931 அக்டோபர் 31 இல் பொதுமக்கள் பார்வைக்குக் ‘காளிதாஸ்’ வருமுன்னரே அக்டோபர் 29 ஆம் தேதியிட்ட சுதேசமித்திரன் நாளேட்டில் வெளியான ‘காளிதாஸ்’ திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி,

“தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ். டி.பி.ராஜலட்சுமி முதல் முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்."

"நாடக மேடையில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜ கிருதிகளான, எந்தரா நீதானோ, சுராக சுதா என்றவிரு பாட்டுக்களையும் ஹரி காம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். இதைத் தவிர “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண்சண்டை”, “ராட்டினமாம் காந்தி கைபாணமாம்” என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாகவிருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக். 42-43)

சுதேசமித்திரன் விமர்சனத்தில் காளிதாசனாக நடித்த தெலுங்குக் கதாநாயகனின் பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை.

முதல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசி, பாடி நடித்துப் புகழ்பெற்ற டி.பி.ராஜலட்சுமி முதன்முதலாகச் செய்து சாதித்த சாதனைகள் பலப்பல.

இவர் 1911 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதியன்று திருவையாறு சாலியமங்கலம் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். ஏழு வயதிலேயே சுந்தரம் என்பவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். திருமண வாழ்க்கை ஒன்றிரண்டு வருடங்கிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. வரதட்சணைக் கொடுமை அல்லது சுந்தரத்தின் மரணம், ஏதோவொன்று தெளிவான குறிப்புகளில்லை. பிறந்தகம் மீண்டார். மீண்டும் சோதனை தந்தையாரின் அகால மரணம். விதவைத் தயாரோடு வாழ்க்கையை இழந்த டி.பி.ராஜலட்சுமி வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். திருவையாறு தந்த இசைப்புலமை கைகொடுக்க நாடகத்துறையை நாடினார்.

டி.பி.ராஜலட்சுமி தமது பதினோராம் வயதில் நாடகக் கம்பெனிகளில் காலடி எடுத்துவைத்தார். நாடக உலகம் இருகரம் நீட்டி அவரை வரவேற்று அரவணைத்துக் கொண்டது. முதலில் அவர் மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி நாடகத்தில் பவேந்திரன் பாத்திரத்தில் தம் பதினோராம் வயதில் நடிக்கத் தொடங்கினார் டி.பி.ராஜலட்சுமி.

இவருக்கு முன் நாடகமேடைகளில் பெண்கள் நடிக்கும் பழக்கம் கிடையாது. ஆண்களே பெண்வேடம் புனைந்து நடிப்பார்கள். முதன்முதலாக நாடகமேடையில் தோன்றி நடித்த பெண் என்ற பெருமைக்குரியரானார் டி.பி.ராஜலட்சுமி. கடல்கடந்த நாடுகளிலும் குறிப்பாக, மலேசியா, இலங்கை முதலான நாடுகளுக்குச் சென்று நாடகமேடைகளில் பாடி, நடித்துப் பெரும்புகழ் பெற்றார். இந்தவகையிலும் இவரே முதல்பெண்மணி என்ற பெருமை பெறுகின்றார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் கோவலன் நாடகத்தில் மாதவி வேடத்தில் டி.பி.ராஜலட்சுமி தோன்றி நடித்த நாடகத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாத்மா காந்தி அவரின் நடிப்பைப் பாராட்டி ஒரு புலி பொம்மையைப் பரிசளித்தார் என்றும் டி.பி.ராஜலட்சுமி தன்கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று வழங்கினார் என்றும் எஸ்.எம். உமர் அவர்கள் தம் ‘கலை உலக சக்ரவர்த்திகள்’ என்ற நூலில் (ப. 434) குறிப்பிடுகின்றார்.

ஒரு நடிகையாகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தபோதும் அவர் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. பொதுவாழ்வில் நாட்டம் கொண்டவராகவும் சமூக அக்கறை உடையவராகவும் தேச விடுதலைக்குப் பணியாற்றுபவராகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு பணியாற்றியமை மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

டி.பி.ராஜலட்சுமி காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த நாட்டமுடையவராகவும் தேச விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புக் கொண்டவராகவும் இருந்துள்ளார். இவர் நாடகங்களில் நடிக்கும் காலங்களில் நாடகம் முடிந்தவுடன் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இதன் காரணமாகப் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Sunday 6 December 2009

விளம்பரங்கள் காட்டும் வாழ்க்கை யாருடைய வாழ்க்கை?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:

விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?

விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.

இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன.

முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.

ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.

விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.

Saturday 5 December 2009

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

ஒவ்வொரு விளம்பரத்தையும் தனித்தனியாகப் பார்த்து அவற்றின் செல்வாக்கை, தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்வது ஒருவகை அணுகுமுறை. ஒட்டுமொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் கூர்ந்து கவனித்து அவைகளைப் புரிந்துகொள்ள முயல்வது மற்றொரு அணுகுமுறை. இவ்விரண்டாம் அணுகுமுறையிலேயே விளம்பரங்களின் முழுமையான அரசியலை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியம்.

நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்களாயினமை எப்படி?

ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.



மேலே உள்ள விளம்பரம் 1953 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தது. சென்ட்ரல் டீ போர்டாரால் வெளியிடப்பட்ட அவ்விளம்பரம் “இரவு பகல் எந்த வேளையிலும், எந்த நிலையிலும் தேனீர் உற்சாகம் அளிக்கிறது” என்ற வாசகத்தோடு தேனீர் குடிக்க ஆலோசனை கூறுகிறது.

உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்.

Friday 4 December 2009

எது நுகர்வுக் கலாச்சாரம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

எது நுகர்வுக் கலாச்சாரம்:

பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம்.

இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.

நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள்.

புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.

Thursday 26 November 2009

அட! வலைப்பதிவுக்குள்ள இவ்வளவு இருக்கா? -பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




1. வலைப்பதிவுத் தலைப்பு
(Title):

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.

2. வலைப்பதிவு முகப்பு
(Description):

வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (டுநயன) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.

3. பதிவின் தலைப்பு
(Title of the Post):

வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

4. பதிவின் உடல்பகுதி
(Post):

வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.

அட! வலைப்பதிவுக்குள்ளே இவ்வளவு இருக்கா? -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்
(Date, Time, Author Stamp)

சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவுசெய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

6. பின்னூட்டங்கள்
(Comments):

வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம்பெற்றிருக்கும்.

அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவுசெய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

7. சேமிப்பகம்
(Archives):

வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம்பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும்.

வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக்கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

8. இணைப்புகள்
(Links):

ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.

9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்
(Page Elements):

வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

Wednesday 11 November 2009

காலக் குறியீடுகள் -திரைப்பட மொழி ஆய்வு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திரைப்படங்களில் காலக் குறியீடு

திரைப்படத்தில் ஒரு திரைக்கதை எடுத்துக் கொள்கிற கதையின் முழுமையான கால அளவு என்பது வரையறுக்க முடியாதது. அது ஒரு மணிநேரத்தில் நடந்த கதையாக இருக்கலாம் அல்லது ஓராயிரம் ஆண்டுகள் நடந்த கதையாக இருக்கலாம். ஆனால் திரைப்படம் ஓடக்கூடிய நேரம் சுமார் இரண்டரை (2½) மணி நேரம்தான். திரைப்படத்தில் காட்சி நடக்கும் நேரம் என்பது உண்மையான நேரத்திற்குச் சமமானதாக இருக்கும். இது திரைப்படத்தின் பொதுவிதி.

இந்த இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில்தான் பல நூறு ஆண்டுக் காலத்தைப் பார்க்கிறோம். அதாவது கதை நிகழ்கின்ற ஆயிரக்கணக்கான மணி நேரத்தை நாம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் மட்டுமே பார்க்கிறோம். மீதி உள்ள நேரங்கள் காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இருக்கின்றன.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான மாற்றத்தின்போது உள்ள கால இடைவெளி ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதி, இந்தக் கால இடைவெளியில்தான் திரைக்கதை சில நாட்களையோ, மாதங்களையோ, சில ஆண்டுகளையோ கடந்து விடுகின்றது. இந்த இடைவெளிகளின் கால ஓட்டத்தைப் பார்வையாளனுக்குச் சரியான அளவில் புரிய வைப்பதில்தான் திரைப்பட மொழி முழுமை பெறுகின்றது.

திரைப்படத்தில் காலத்தைப் பொறுத்தவரை இரண்டு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1. காட்சி நடக்கும் நேரம். 2. காட்சிகளுக்கு இடையிலான நேரம்.

முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரங்களைக் கணக்கிட்டால் திரைப்படம் ஓடக்கூடிய மொத்த நேரத்தைப் பெறலாம். இரண்டாம் கூறாகிய காட்சிகளுக்கு இடையிலான நேரத்தை/ காலத்தை மொத்தமாகக் கணக்கிட்டு முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரத்தோடு கூட்டினால் திரைக்கதை நிகழக்கூடிய முழுமையான காலஅளவைக் கண்டுபிடிக்கலாம்.

காட்சிகள் நிகழும் மொத்த நேரம்
+
காட்சிகளுக்கு இடையிலான மொத்த நேரம்
=
திரைக்கதையின் முழுமையான கால அளவு

திரைப்படத்தில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளுக்கான காலமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. முதல் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் காட்சி, முதல்காட்சி நடைபெற்ற காலத்தைத் தாண்டி இரண்டாம் காட்சி நடைபெறும் காலம். முதல், இரண்டாம் காட்சிகளில் காலம் இடையீடு இன்றித் தொடர்வதில்லை. அப்படித் தொடர்ந்தால் வேறு வேறு காட்சிகளாக அவைகள் சித்தரிக்கப்படுவது பொருத்தமில்லை. காட்சிகள் வேறுபடுவதால் காட்சிகளுக்கிடையே கடந்துசென்ற காலத்தின் அளவைத் தெளிவுபடுத்துவதே காலக் குறியீடுகளின் வேலை.

திரைக்கதையில் கால நகர்வு

திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கிடையே காலம் கடந்திருப்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் அந்த இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழ்கின்ற புதிய காட்சி ஒன்றைப் புகுத்த வேண்டும். இந்தப் புதிய காட்சிக் குறுக்கீடு திட்டமிட்டுத் திரைக்கதை ஆசிரியரால் புகுத்தப்படுவது.

தமிழ்த் திரைப்படங்களில் இந்தவகை இடையீட்டுக் காட்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் உத்தி நகைச்சுவைக் காட்சிகளை இணைத்தலே. திரைப்படத்தின் பிரதான திரைக்கதைக்கு இணையாகத் தனித்ததொரு துணைக்கதை (Comedy Track) என்ற போக்கில் இத்தகு காட்சிகள் இணைக்கப்படும்.

Friday 6 November 2009

வலைப்பதிவு சில கூடுதல் தகவல்கள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

வலைப்பதிவு சேவை வழங்குவோர்:

வலைத்தளங்கள் போல் அல்லாமல் வலைப்பதிவு சேவைகளைப் பல இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்றன. வலைப்பதிவு சேவையை வழங்கும் சில இணையதளங்கள்:
1. http://www.blogger.com
2. http://www.blogdrive.com
3. http://www.livejournal.com
4. http://blogs.sify.com
5. http://wordpress.com
6. http://www.blogsome.com
7. http://www.rediffblogs.com

இந்த இணைய தளங்கள் மட்டுமன்றி வேறு பல இணையதளங்களும் வலைப்பதிவு சேவையை வழங்குகின்றன.

Blogger.com
வலைப்பதிவுச் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இந்த ப்ளாக்கர்.காம் சேவைதான். எளிமையான அமைப்புகளுடனும் அதேசமயம் தேவையான பல வசதிகளுடன் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த ப்ளாக்கர். காம் மிகுந்த நம்பகத்தன்மை உடையது என்று தமிழ் வலைப்பதிவாளர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.

வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1. வலைப்பதிவுத் தலைப்பு
2. வலைப்பதிவு முகப்பு
3. பதிவின் தலைப்பு
4. பதிவின் உடல்பகுதி
5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்
6. பின்னூட்டங்கள்
7. சேமிப்பகம்
8. இணைப்புகள்

மேலே குறிப்பிடப்பட்ட எட்டுப் பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறுசில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம்பெறுவதுண்டு.

வலைப்பதிவின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் தனித்தனியாக விரிவான விளக்கம் தொடரும்.

Monday 2 November 2009

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு.

ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களை உருவாக்க html அறிவு ஓரளவேனும் தேவை.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகளை உருவாக்க html அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (Templates) இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.

வலைத்தளங்கள்: வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி எழுதுபவர் ஒருவராகவும், html கொண்டு அத்தகவல்களை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னூட்டம் சில தளங்களில் உண்டு.
வலைப்பதிவுகள்: வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னூட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.

மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.

வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம்.

Saturday 31 October 2009

அட! வலைப்பதிவுன்னா இவ்வளவுதானா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

வலைப்பதிவு: தம் படைப்புகளைத் தாமே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் இதனை Blogging என்பர். தமிழில் இது வலைப்பதிவு எனப்படும். இதனை வலைப்பூக்கள் என்றும் சிலர் வழங்குவர். ஒருவர் தம் பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கத் தேவைப்படுவன, கொஞ்சம் கணினி அறிவு, இணையத் தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே.

வலைப்பதிவுக்குப் பொருள் செலவு ஏதும் கிடையாது. இணையத்தில் இந்தச் சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தித் தமிழிலேயே ஒருவர் தம்முடைய படைப்புகளைப் பதிப்பிக்கலாம்.

வலைப்பதிவுகளை வேறுவிதமாகவும் விளக்கலாம். அதாவது இணையத்தின் வழி ஒரு தனிநபர் உருவாக்கும் இதழ் அல்லது நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்பு அனைவரும் படிப்பதற்கானது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வலைப்பதிவுகளில் பல்வேறு பதிவுகளைப் பதித்து வருகின்றார்கள். இதில் பலர் கணிப்பொறி, இணையத் தொழில் நுட்பம் அறியாதவர்கள். வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய எளிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் இத்தகு தொழில்நுட்ப உதவிகள் அனைவருக்கும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினி பற்றிச் சிறிதளவே தெரிந்தவர்கள் கூட, தங்களுக்கென்றுச் சொந்தமான வலைப்பதிவினை உடனே உருவாக்கிக் கொள்ள முடியும்.

அநேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்ததொரு வாசகர் வட்டம் அமைந்து விடுவதுண்டு. இக்காரணம் பற்றியே வலைப்பதிவுகள் வாசகர்கள் கருத்துரையாடுதற்கு ஏற்றார்போல் அமைக்கப்படுகின்றன.

பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களைப் பின்னூட்டங்களாக உடனடியாக அவ் வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக் கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களையும் அடுத்து வரும் வாசகர்கள் பார்க்க வலைப்பதிவுகளில் வாய்ப்புண்டு. தேவையேற்படும் போது பின்னூட்டம், பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் என்று சங்கிலித் தொடர்போல் பதிவு தொடரந்து சென்றுகொண்டே யிருக்கும்.

தகவலின் இடையிடையே படமோ, ஒலியோ, சலனப்படமோ எது தேவையோ அதனை இணைத்துத் தரும் பல்லூடகத் தகவல் முறை வலைப்பதிவுகளில் சாத்தியம். அச்சு ஊடகங்களில் எழுத்தோடு படங்களை மட்டுமே இணைக்க முடியும்.

வலைப்பதிவில் நாம் இதற்குமுன் எழுதிய அனைத்துத் தகவல்களும் தனியே வார வாரியாகவோ, மாத வாரியாகவோ வகைப்படுத்தி சேமிப்பகம் (Archive)பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர் பழைய தகவல்களையும் இந்தப் பகுதியில் இருந்து படித்துக் கொள்ளலாம்.

Tuesday 27 October 2009

எதைச் சாதிக்க இந்த வலைப்பதிவுகள்?

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.

ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.

இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவுஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின.

கணிப்பொறி சார்ந்த D.T.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின.

புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு ஊடக அதிகாரங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.

Friday 23 October 2009

ஊடகங்கள் சொல்லும் கதை

ஊடகங்கள் சொல்லும் கதை

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கதையானது மனித வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே தோன்றிவிட்டது என்பதனைத் தமிழ்க் கலைக்களஞ்சியம் ‘வேட்டையாடச் சென்று திரும்பிய மனிதன் தனது அனுபவத்தைப் பிறருக்குக் கூற முற்பட்ட அன்றே கதை தோன்றிவிட்டது’ எனக் குறிப்பிடுகிறது. மனித வாழ்வின் தொடக்கம் முதலே இப்படிக் கதை கேட்டுப் பழக்கப்பட்ட மனிதன் அண்மைக்காலம் வரை தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டுக் கேட்டு கதைகளுக்கு அடிமையாகிப் போனான்.

இந்த இயல்பு மனித மனத்தின் ஆழத்தில் வேரோடி இருப்பதால்தான் கதை சொல்வதை ரசித்த காலம் போய் இப்போதெல்லாம் கதை விடுகிறவர்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் கதை சொல்வதும் கேட்பதும் இயலாததாகி இருக்கிறது. ஆனால் மனித மனத்தின் ஆசை? விடுபட்ட அந்த இடத்தை நிரப்புவதற்காக ஊடகங்கள் இப்பொழுது கதை சொல்ல ஆரம்பித்து விட்டன.

ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. கதை என்கிறபோது பொய் என்ற பொருள் கொள்ளத் தேவையில்லை. நிகழ்வுகளின் / தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டு தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது.

தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. தற்போது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் கதையாடலில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.

ஊடகக் கதைகள் சில:

அண்மைக் காலத்து உதாரணங்கள் சிலவற்றின் மூலம் ஊடகங்களின் கதையாடலை விளங்கிக் கொள்ளலாம். கும்பகோணம் பள்ளித் தீவிபத்து, சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு, கஞ்சா இளம்பெண் ஷெரீனா பானு வழக்கு, செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம், சரவணபவன் அண்ணாச்சி வழக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஊடகங்களால் கதையாக்கப் படுகின்றன.

இத்தகு கதையாடல்களில் செக்ஸ் டாக்டர், கஞ்சா பெண், போலி சாமியார் போன்ற பெயரிடல்கள் கதை அம்சத்திற்குப் பெரிதும் உதவியாய் அமைகின்றன. செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிரடித் தகவல்கள், பகீர் ரிப்போர்ட், திடுக் திருப்பங்கள் போன்றவற்றால் மர்மக் கதைகளைப் போலவும் ஆக்ஷன் கதைகளைப் போலவும் வளர்த்து சொல்லப்படுகின்றன.

ஊடகங்களைப் பொறுத்தமட்டில் இவை செய்திகள் மட்டுமல்ல, ஊடகச் செய்திகளைப் பரபரப்புக்கு உள்ளாக்கும் வணிக விஷயம். இது வியாபாரம் சம்பந்தப்பட்டது. இவற்றை வெறும் செய்திகளாக்குவதில் வருவாய் குறைவு. கதையாக்குவது வாசகர்களை / பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வியாபார உத்தி. தினம் தினம் புதிய புதிய தலைப்புகளில் இந்தக் கதைகள் சொல்லப்படும். கதையாடலின் முக்கிய நோக்கமே வாசகர்களுக்குச் சுவாரஸ்யத்தை உண்டாக்குவது என்பதுதான்.

Monday 19 October 2009

திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8


இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த ஊடகம் திரைப்படம்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஏனைய ஊடகங்களைவிட இப்பொழுதுதான் நூறு வயதைக் கடந்திருக்கும் இந்த அறிவியற்கலை சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் வியப்பளிக்கக்கூடியது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படங்களால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மை. தினசரிச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் தொடங்கி, அன்றாடம் நம் கண்களில் படும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றில் நாம் படிப்பது / பார்ப்பது, நம்மைச் சுற்றி வீட்டில், பள்ளி - கல்லூரிகளில், அலுவலகங்களில், பொது இடங்களில் பேசப்படுவது என அனைத்திலும் திரைப்படங்கள் விரவிக் கிடக்கின்றன.

இது போதாதென்று நாம் எப்பொழுதும் மூழ்கிக் கிடக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், திரைப்படத் துணுக்குகள், திரைப்படப் பாடல்கள், நடிகர் நடிகையர் பேட்டிகள் என்று திரைப்படம் தொடர்பான தகவல்களே கொட்டிக் கிடக்கின்றன. ஆக நம்மைச் சுற்றியுள்ள காற்று, நீர், வெளி போன்று திரைப்படங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன.

திரைப்படங்கள் ஒரே சமயத்தில் நமக்குக் கலை அனுபவமாகவும், சூழலாகவும், வியாபாரப் பண்டமாகவும், தகவல்களைச் சொல்லும் தகவல் தொடர்புச் சாதனங்களாகவும் உள்ளன. எனவே ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையோடு திரைப்படங்களை அணுகுவதைவிட, மேலே சொல்லப்பட்ட பன்முகப் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை அணுகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, பின்வரும் கருத்தாக்கங்களை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.

1. திரைப்படங்கள் என்பது பிம்பங்கள் ஆட்சி செய்யும் சாம்ராஜ்யம். திரைப்படங்களை அணுகும்போது இந்த பிம்பங்களை அதிகக் கவனத்தோடு பார்க்க வேண்டும்.

2. திரைப்படம் என்பது முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட ஒன்று. நடிகர் நடிகையரின் அங்க அசைவு உட்படக் கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. திரைப்படத்தில் தோன்றுவது எதுவுமே தற்செயலானதும் இயல்பானதும் இயற்கையானதுமல்ல.

3. திரைப்படத்தை ஒலி, ஒளி, காமிரா கோணம் எனும் பல்வேறு வி~யங்களோடு சேர்த்தே பார்க்க வேண்டும். வெறுமனே கதை அல்லது வசனங்கள் என்கிற ரீதியில் திரைப்படம் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். (சுரேஷ் பால், மீடியா உலகம், ப.185)

திரைப்படங்கள் என்பது பிம்பங்களின் தொகுப்பு; காட்டப்படுபவை அனைத்துமே உருவாக்கப்பட்டவை. காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப்படுவதே திரைப்படத்தின் மொழி என்கின்ற புரிதல்களோடு திரைப்படங்களைப் புரிந்துகொள்ள முயலலாம்.

Thursday 15 October 2009

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காலம் என்பது இயக்கத்தில் இருப்பது. கண்ணால் காண முடியாதது. திரைப்படங்களில் இடத்தைச் சித்தரிப்பதைப் போல் அவ்வளவு எளிதாகக் காலத்தைச் சித்தரித்துவிட முடியாது. காட்சியின் தொடக்கத்திலேயே இட மாற்றத்தை பார்வையாளனுக்கு உணர்த்திவிட முடியும். கால மாற்றத்தை / கால நகர்வை வெளிப்படுத்தாமலேயே பார்வையாளன் உணர்வான். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு செயலின் முடிவும் காலம் பயன் படுத்தப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறது. திரைப்படத்தில் காட்சிகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல் காண்பிக்கப்பட்டாலும், திரைக்கதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். சொல்லப்பட்ட காட்சிகளுக்கிடையே சொல்லப்படாத காட்சிகள் புதைநிலையில் உள்ளன. எனவே காட்சிகளுக்கு இடையே கடந்துபோன காலம், நிமிடங்களா? மணிநேரமா? பொழுதா? நாட்களா? மாதங்களா? ஆண்டுகளா? என்பதைத் திரைப்படம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

காட்சிகளுக்கு உள்ளேயே ஷாட்களுக்கு இடையே காலம் நகர்கிறபோது, அநேகமாக நிமிடம், மணிநேரம் என்ற அளவில் காலம் கடந்ததைக் கடிகாரத்தின் துணையோடு, அதாவது கடிகார முள் சுழற்சியை டிசால்வ், சூப்பர் இம்போஸ் செய்து காண்பித்துவிடுவார்கள். சான்றாக, நாயகன் கடிதம் எழுதும் நேரம், நாயகி உடை மாற்றிக்கொண்டு வரும் நேரம், நோயாளி மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் போன்ற கால நகர்வுகள் இவ்வகைக் குறியீடுகளின் வழி பார்வையாளருக்கு உணர்த்தப்படும். அழகன் திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் தொலைபேசியில் மாலை தொடங்கி இரவு கடந்து மறுநாள் காலை வரை உரையாடும் காட்சியில் கால நகர்வுகள் இயக்குநர் பாலசந்தர் அவர்களால் பல்வேறு குறியீடுகளின் வழியாக காண்பிக்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இரண்டு காட்சிகளுக்கிடையே இடையீட்டுக் காட்சியின்றி காலம் நகர்கிற பொழுது அதாவது நாள் அல்லது காலை, மாலை போன்ற பொழுது நகர்கிறபோது இத்தகு காலநகர்வைக் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் திரைப்படங்களில், விளக்கேற்றப்படுதல் அல்லது விளக்கணைத்தல், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம், கோயில் மணியோசை, பாங்கோசை, தேவாலய மணியோசை, பூபாள இசை, சுப்ரபாதம், பறவைகளின் சப்தம், நாள்காட்டியில் நாள்தாள் கிழித்தல் முதலான காலநகர்வுக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.

காட்சிகளுக்கிடையே சில நாட்கள் கடந்துள்ளமையைப் புலப்படுத்த நாள்காட்டியின் நாள்தாள்கள் படபடவெனப் பறந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைகொள்வதாகக் காண்பிப்பதுண்டு. இயக்குநர் பாலச்சந்தர் தம் சிந்து பைரவி திரைப்படத்தில் கதைநாயகன், கதைநாயகி இருவரும் கோபித்துக் கொண்டு சிலநாட்கள் பேசாமல், சந்திக்காமல் காலம் கடத்துவதை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் ஒரு கிழமை இதழ் என இணைத்துப் போடும் ஷாட்களைத் தொடர்ந்து காண்பித்து நாட்களின் நகர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

காட்சிகளுக்கிடையே பல மாதங்கள் கடந்திருப்பதை வெளிப்படுத்த இலையுதிர்ந்த மரத்தைக் காண்பித்து அதே பிரேமில் சூப்பர் இம்போஸில் அந்த மரமே பூத்துக் குலுங்குவதைப்போல் காண்பிப்பதுண்டு. சற்றேறக்குறைய இதே உத்தியில் செடி வளர்வது, கொடி வளர்ந்து பூ பூப்பது போன்ற காலக்குறியீடுகள் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறுவதுண்டு.

இரண்டு காட்சிகளுக்கிடையே பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இத்தகு கால நகர்வைப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டச் சுழலும் சக்கரத்தைக் காண்பிப்பதுண்டு. காலச் சக்கரத்தின் சுழற்சியைக் குறிப்பிடும் சக்கரங்களாகக் திரைக்காட்சியில் வண்டிச் சக்கரம், தையல் இயந்திரச் சக்கரம், தொழிற்சாலையின் ஏதேனும் ஒரு இயந்திரச் சக்கரம் முதலான சக்கரங்களில் ஒன்று இடம்பெறுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கால நகர்வைச் சில நாட்களுக்குப் பின்.., சில ஆண்டுகளுக்குப் பின்.., 20 வருடங்களுக்குப் பிறகு.. என எழுத்தில் எழுதிக் காண்பித்து விடுவதும் உண்டு.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் குறித்துப் பலவகை விமர்சனங்கள் உண்டு. பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கால நகர்வுக்கான உத்தியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் திரைக்கதையில் கடக்கும் கால நகர்வைப் பாடல்காட்சி ஒன்றைப் புகுத்துவதன் மூலம் மிக எளிமையாக இயக்குநர் பார்வையாளர்களுக்குப் புலப்படுத்தி விடுவார்.

தமிழ்த்திரைப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் ஒருத்தி கலெக்டர் ஆகிவிடுவதையும், ஓர் ஏழை பணக்காரன் ஆகிவிடுவதையும் நாம் பலமுறை பார்த்ததுண்டு. விபத்துக்குள்ளான/ நோய்வாய்ப்பட்ட கதைப் பாத்திரங்கள் பலர் முழுக்குணம் பெறுவதற்கான கால நகர்த்தலைப் பாடல் காட்சிகள்தாம் செய்கின்றன. இத்தகு பாடல் காட்சிகள் அந்தச் செயல்ககளுக்குரிய முழுமையான கால இடைவெளியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெறும் "யார் யார் சிவம்? அன்பே சிவம்!" என்ற பாடல் காட்சியில் கடுமையான விபத்துக்குள்ளான கதைநாயகன் முழுமையாக குணம்பெறும் நெடியகாலம் கடத்தப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் காட்சிகளுக்கிடையிலான கால நகர்வை (இட நகர்வையும் சேர்த்து) படம் முழுவதும் எழுத்தில் எழுதிக் (Sub Title) காண்பித்தது.

சான்றாக, கதாநாயகன் விமானத்தில் மதுரை வந்திறங்கி, கொலையைத் துப்புத் துலக்கும் ஒருநாள் நிகழ்ச்சியை விளக்கும் தொடர்ச்சியான காட்சிகளில் காலை 8-30 மணி, காலை 10-30 மணி, மாலை 5-00 மணி எனக் கால நகர்வை எழுத்தில் காண்பித்தது. இந்த உத்தி சற்றேறக்குறைய ஊமைப்படக் கால உத்தி என்றாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய உத்தியாகவே பயன்பட்டது. ஏனெனில் கதாநாயகன் துப்பறியும் கதையின் வேகப் போக்குக்கு, வழக்கமான இடையீட்டுக் காட்சிகளால் கால நகர்வை வெளிப்படுத்தும் பழைய முறை பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று இயக்குநர் கருதியிருப்பார்.

Tuesday 13 October 2009

திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.

திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

ஒரு காவியம் எவ்வாறு பல்வேறு காதை, இயல் போன்ற உட்பகுப்புகளால் கட்டப்படுகிறதோ அதேபோல் திரைப்படங்கள் காட்சிகள் என்ற பகுதிகளால் உருவாக்கப்படுகின்றன. காட்சிகள் பல்வேறு ஷாட் களால் (படத்துணுக்கு) உருவாக்கப் படுகின்றன. ஷாட் என்பது திரைப்படக் காட்சியின் அடிப்படை அலகு. அதன் நீளம் வரையறுக்கப் படவில்லை. ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு தனித்த துண்டுப் படம்; எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து படமாக்கப்பட்ட ஒரு படத் துணுக்கு.

காட்சி என்பது திரைப்பட முழுக்கதையின் ஒரு பகுதி. அதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடம், காலம் என்பன தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகின்றன. இடம், காலம் என்ற பின்புலம் இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் யதார்த்தத்தில் நடப்பதில்லை. திரைப்படங்களிலும் அப்படித்தான்.

தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டவற்றைப் பின்வருமாறு விவரிக்கலாம். திரைப்பட முழுமையின் ஒரு பகுதியாக அமையும் காட்சிகளில் நிகழ்த்தப்பெறும் நிகழ்வு 'உரிப்பொருள்' ஆகும். காட்சியின் பின்புலமான இடமும் காலமும் 'முதல்பொருள்'.

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
(தொல். பொருள். அகத். நூ. 4)

காட்சியில் பங்கேற்கும் நடிகர்கள், அரங்கப்பொருள்கள், பின்னணி இசை முதலானவை 'கருப்பொருள்கள்'. தொல்காப்பியரின் முதல், கரு, உரிப்பொருள் கோட்பாடுகளைக் கொண்டு திரைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் பரந்த வீச்சினைப் புலப்படுத்துவதாகும்.

உரிப்பொருளைச் சிறப்பிக்க முதல், கருப்பொருள்கள் எவ்வாறு அகப்பாடல்களில் பயன்பட்டனவோ அதேபோல் திரைப்படக் காட்சிகளைச் சிறப்பிக்க/ முழுமைப்படுத்த இடம், காலம் என்கின்ற முதல்பொருளும் மேலே குறிப்பிடப்பெற்ற கருப்பொருள்களும் பயன்படுகின்றன.

Friday 9 October 2009

தகவல் தொடர்புச் சாதனங்கள்

தகவல் தொடர்புச் சாதனங்கள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக்கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்ஃபோன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம்.

ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதையெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன.

நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதை ஊடகங்களே முடிவுசெய்கின்றன. இந்தியாவில் பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் போது சராசரி இந்தியனும் இந்த விஷயங்களைப் புறக்கணித்து விடுகிறான். சிவகாசி ஜெயலட்சுமியும் கொலைக் குற்றவாளி காஞ்சி பெரியவாள்களும் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் வரும்போது ஊடகங்களால் தீர்மானிக்கப்படும் சராசரி இந்தியச் சிந்தனையில் இவை விவாதத்திற்குள்ளாகின்றன.

ஊடகங்கள் நிகழ்வுகளை, நாம் பார்க்க வேண்டிய கோணங்களை மட்டும் தீர்மானிப்பதில்லை. மாறாக நிகழ்வுகளையே ஊடகங்கள் மாற்றிவிடுகின்றன. ஏனெனில் ஊடகங்கள் சித்தரிப்பவை எல்லாம் உண்மைகள் இல்லை. ஊடகங்கள் தகவல்களை யதார்த்தங்களில் இருந்து உருவாக்குகின்றன, தயாரிக்கின்றன, வெட்டி ஒட்டுகின்றன, கோர்க்கின்றன. அர்த்தங்களை உருவாக்குகின்றன. சான்றாக, சுனாமிப் பேரழிவு. இந்நிகழ்வு ஊடகங்களால் அதாவது வானொலி எழுத்துரைகளால் பத்திரிக்கைச் செய்திகளால் புகைப்படங்களால், தொலைக்காட்சிக் காமிராக்களால் எப்படி உண்மையிலிருந்து உருவாக்கப் படுகின்றன என்று பார்ப்போம்.

முதலில் தேர்ந்தெடுத்தல்: எந்தக் காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே ஊடகங்களின் பணி தொடங்கிவிடுகிறது. எந்த நிகழ்வைக் காட்சியாக்குவது எந்தக் கோணத்தில் காட்சியாக்குவது படங்களோடு இணைக்கப்பட வேண்டிய அல்லது விடப்பட வேண்டிய வார்த்தைகள் எவை எவை என்று தேர்ந்தெடுத்தலும் தொகுத்தலும் (நீக்குதல் இணைத்தல்) கொண்டு நிகழ்வுகள் உருவாக்கப்படுகின்றன. சாதனங்களில் எவையுமே எதேச்சையாகவோ இயற்கையாகவோ இணைந்துவிடுவதில்லை. எல்லாமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்துக் கோர்க்கப்படுகின்றன.இப்படித் தேர்ந்தெடுத்துக் கோர்ப்பதில்தான் அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன.

சுனாமிப் பேரழிவைக் காட்டும்போது தூக்கி வீசப்பட்ட படகுகள், உருக்குலைந்த குடியிருப்புகள், சிதைந்த உடல்கள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் நிவாரணப் பணிகள் அரசின் உதவிகள் மருத்துவச் சேவைகள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் இரண்டுவிதமான காட்சிகளையும் இணைத்துக் காட்டும்போது வேறுவித அர்த்தமும் உருவாக்கப் படுகின்றன. இவை மட்டுமின்றி பின்னணி இசை, காட்சிகளுக்கான வருணனை, காமிரா கோணம் இவைகளும் அர்த்தங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்படிக் கோர்ப்பதும் அர்த்தங்களை உருவாக்குவதும் ஊடகங்களால் எந்த நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான வினா.

ஊடகங்கள் எல்லாம் நேர்மையானவை என்றோ நடுவுநிலை வகிப்பன என்றோ சொல்லமுடியாது. ஏனெனில் எல்லா ஊடகங்களுக்கும் சார்புகள் உண்டு. பொதுவாக ஊடகங்கள் இந்தியச் சூழலில் உயர்வர்க்கச் சார்புடையதாகவும், உயர்வகுப்புச் சார்புடையதாகவும் இந்துத்துவச் சார்புடையதாகவும் ஆணாதிக்கச் சார்புடையதாகவும் இருக்கின்றமையை நாம் உணர முடியும். விதிவிலக்குகள் உண்டு. இந்தச் சார்புகளை ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைத்து வைத்தாலும் அவை ஒவ்வொரு ஊடக நிகழ்விலும் வெளிப்பட்டே தீரும்.

மனிதத் தின்னிகள்

மனிதத் தின்னிகள் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.
வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.
எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.
செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.
செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.
கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.
ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?
என்ன செய்திகள் இவை?
இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.
வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.
குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.
மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு
நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு
கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்
இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…
பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும்
எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

உள்ளங்கையும் கட்டை விரலும்

உள்ளங்கையும் கட்டை விரலும் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

உலக உருண்டை
உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது

கை நீட்டிக் குரலெடுத்து
அழைத்ததெல்லாம் போய்
கட்டை விரலால் அழைப்பு

கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு
விரல்களாலே
தடவித் தடவி அழைப்பு
ஓயா அழைப்பு!

முகங்கள்
உருண்டையாய் நீண்டதாய்
தட்டையாய் கோணலாய்
அழகாய் விகாரமாய்
எத்தனை எத்தனை முகங்கள்
எல்லாம் கரைந்து
0 1 2 3 4 5 6 7 8 9
எண்களில் அமிழ்ந்து போயின

முகங்களற்ற உலகில்
வெட்டவெளியில்
மிரட்டல்கள் கோபங்கள்
சவால்கள் சமாதானங்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
மௌனங்கள்

பிரபஞ்சமே
உதடுகளில் தொடங்கி
செவிகளில் முடிந்து போனது
கண்கள் மட்டும் களவு போயின.

எதிரே
உறவும் நட்பும்
முகங்களைக் காணோம்
எண்கள்… எண்கள்…
கட்டைவிரல்
உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.

ஊடக வாசல்




வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்! என்னுடைய வலைப்பதிவுப் பயணத்தில் நான்காவது தடம்.

இந்த வலைப்பதிவு தகவல் தொடர்பியல் சார்ந்தது. புதுவையைச் சார்ந்த செய்திகள், விழாக்கள், நிகழ்ச்சி அறிவிப்புகள், நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், ஊடகங்கள் சார்ந்த தகவல்கள், குறிப்புகள், கட்டுரைகள் என விரியும். தொடர்ந்து உங்கள் பார்வையைப் படர்க்கையின் பக்கமும் செலுத்துங்கள். நன்றி!

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி
இந்தியா

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...