Sunday 10 January 2010

காதல் மணத்தை வலியுறுத்தும் டி.பி.ராஜலட்சுமி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-5

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

காதல் மணத்தின் மேன்மை:
நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி நாவலில் மையப்படுத்தி விவாதப் பொருளாக்குவது பெண்களின் திருமணச் சுதந்திரம் குறித்த சிக்கலையே. இப்பிரச்சனை அவர் தம்சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனையும் கூட. தம் வாழ்க்கையிலும் தம்மையொத்த பெண்களின் வாழ்க்கையிலும் நேர்ந்த இக்கட்டாயமணக் கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் போக்கிலேயே கமலவல்லி நாவலின் கதைப்பின்னல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமணத்திற்கு மாற்றாக, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அடியொற்றிய காதல் மணம் வழிவந்த இல்லறமே மேலானது என்பதை வலியுறுத்த விரும்புகிறார் நாவலாசிரியர், அதனோடு பெண்களை எல்லாநிலைகளிலும் சுந்திரமாகச் செயல்படத் துணைபுரிவதே ஆண்களின் கடமையாயிருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் போக்கில் நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

நாவலில் கமலவல்லியின் தடபுடலான மறுமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கிப் பாரிஸ்டர் பேசும் நீண்டஉரையின் மையக் கருத்தாக இடம்பெற்றிருப்பது காதல் மணத்தின் மேன்மையும், பெண்களின் சுதந்திரம் குறித்த பிரகடனமுமே.

பாரிஸ்டர் பக்தவச்சலம் உரையின் ஒரு பகுதி,

“இப்பரத கண்டத்தில் அக்காலத்தில் பருவமடைந்த ஆண்பெண்கள் ஒருவரையொருவர் மறைமுகமாய்ச் சந்தித்துக் காதலித்த பின்னரே பகிரங்கத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கமிருந்து வந்தது. இதனால் அக்காலத்திலிருந்த குடும்பங்களில் உண்மைக்காதலும் உறுதிப்பாடும் நம்பிக்கையும் மலிந்து கிடந்தன. இவ்வுண்மைகளுக்குத் தொல்காப்பியம், மணிமேகலை, குண்டலகேசி முதலிய காவியங்களே தக்கசான்றாகும்.

தற்காலமோ அத்தகைய களவுக் காதல் மணம் முற்றிலும் ஒழிந்துபோய், விலைமணம் மலிந்து காட்டிலிருக்கும் பெண்ணுக்கும் வீட்டிலிருக்கும் ஆணுக்கும் புரோகிதன் பொருத்தம் தந்தான் என்றவுடன் சதிபதிகளின் இஷ்டத்தையும்கூட எதிர்பாராமல் பலவித சடங்குகளின் மூலம் அவ்விருவரையும் சேர்த்துவைத்து விவாகமென்று சொல்லிவிடுகிறோம்.

அதிலும் பெரியவர்களென்னப் பட்டவர்கள் குழந்தைகளின் கல்யாண விஷயத்தில் பெரும்பாலும் தங்களுடைய உறவு, வருமானம், அந்தஸ்து முதலிய சுயநலங்களையே பெரிதெனக் கருதுகிறார்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 122-123)

“மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து, அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து இன்பவாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தைச் சார்ந்த பெருத்த கடமையாகும்.

ஆருயிர் நண்பர்களே! தேனினும் இனிய நம்தமிழ்நாடு பழைய சீரும் சிறப்பும் பெற்றுப் புகழ்பெற வேண்டுமானால் நீங்கள் பெண்களை, ஆண்களைப் போலவே நினையுங்கள். அவர்களிடம் உங்கள் சுயநலத்தை விட்டுவிடுங்கள். அவர்களுடைய பெருமைக்கும் உயர்வுக்கும் அவர்களைக் கொண்டாடுங்கள். எதன் பொருட்டும் உங்கள் சுயநலத்திற்காக அவர்களுடைய இ~;டத்தையும் சந்தோ~த்தையும் பறிமுதல் செய்யாதீர்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 123-124)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாவலின் பகுதியில் பாரிஸ்டர் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, நடைமுறையில் உள்ள ஏற்பாட்டு மணத்தை விலைமணம் என்று சாடியும் மணமக்களின் விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப்பட்டு பெரியவர்களின் சுயநல வெளிப்பாடாகவே இவ்வகைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்று விமர்சித்தும் புரோகிதன் தருகின்ற பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களின் பொருத்தமின்மையை நையாண்டி செய்தும் டி.பி.ராஜலட்சுமி எழுப்பும் எதிர்க்குரல்களின் பன்முகப் பரிமாணம் நம்மை வியக்க வைக்கிறது.

கமலவல்லியின் கணவன் டாக்டர் சந்திரசேகரன் கமலவல்லியைக் கண்ணப்பனுக்கு மறுமணம் செய்துவைக்கும் முயற்சியின் ஊடாகவே நாவலாசிரியர் சந்திரசேகரனுக்குத் தக்கதொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றார். அவள்தான் பாரிஸ்டர் பத்மாசனி தம்பதிகளின் புதல்வி செல்வாம்பாள். டாக்டர் சந்திரசேகரன் செல்வாம்பாள் திருமணத்தை ஒரு ஏற்பாட்டு மணமாக அதாவது பெற்றோர் பார்த்து மணம்முடிக்கும் விலைமணமாகச் சித்தரிக்க டி.பி.ராஜலட்சுமி விரும்பவில்லை.

அது ஒரு காதல்மணமாக அமைய வேண்டும் என்று நாவலாசிரியர் விரும்பியதன் விளைவாக அன்னநடை ஆரணங்கு என்று பெயரிடப்பட்ட நாவலின் பதினோராம் அத்தியாயம் செல்லாம்பாள் சந்திரசேகரன் இருவரின் காதலை விவரிக்கும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி காதல்மணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடே செல்வாம்பாள் டாக்டர் சந்திரசேகரன் காதல்பகுதி.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...