Sunday 17 January 2010

பாக்கியராஜ் செய்யாத புரட்சி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி -6

பாக்கியராஜ் செய்யாத புரட்சி

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலும் திரைப்படமும்:

1931 இல் வெளிவந்த கமலவல்லி என்ற இந்நாவல் 1936 இல் நாவலாசிரியராலேயே திரைக்கதை அமைக்கப்பட்டு அவரின் சொந்தத் தயாரிப்பில் சொந்த இயக்கத்தில் மிஸ்.கமலா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட செய்தி கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலைப் புரட்சிகரமான மரபு மீறல்களோடு படைத்த டி.பி.ராஜலட்சுமியால் அதே துணிச்சலோடு திரைப்படத்திற்குத் திரைக்கதை அமைக்க இயலவில்லை என்பது ஒரு முக்கியப் பதிவு.

மிஸ்.கமலா திரைப்படத்தின் முன்பாதிக் கதை சற்றொப்ப நாவலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் பின்பாதிக் கதை திரைக்கதையில் மாறுபடுகின்றது.
திரைப்படத்தில், கதைத்தலைவி கமலி கண்ணப்பன் காதல் -கமலி டாக்டர் கட்டாயமணம் -முதலிரவில் கமலி டாக்டரிடம் தன்காதலை வெளிப்படுத்தல்- டாக்டர் காதலர்களைச் சேர்த்துவைப்பதாக உறுதியளித்தல் என்று தொடரும் கதை பின்னர் மாற்றமடைகிறது. எஸ்.எம். உமர் எழுதும், மிஸ். கமலா திரைப்படக் கதைச்சுருக்கத்தின் பின்பாதி வருமாறு,

“கமலி, கண்ணப்பனிடம் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறாள். கண்ணப்பன் மறுத்து விடுகிறான். நீ இன்னொரு வனால் தாலி கட்டப்பட்டவள் என்று! பாவம் கமலி! வேறு என்ன செய்வாள் அவள்? தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.

அந்தக் காரில் இருந்தவர்கள் கண்ணப்பனின் பெற்றோர். அவர்கள் கமலியைத் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர், சிகிச்சைக்காக. சிகிச்சை பார்க்கவந்த டாக்டர் வேறு யாருமல்லை, கமலிக்குத் தாலிகட்டிய, தற்போது அவளைச் சகோதரியாகப் பாவிக்கும் அதே டாக்டர்தான்.
தன் வீட்டிற்குள்ளேயே கமலி வந்துவிட்டதைக் கண்ட கண்ணப்பன் கலங்குகிறான். ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

உடல்நலம் தேறிய கமலி வயிற்றுப் பிழைப்புக்காக ஜிப்சி வேஷம் போடுகிறாள். அந்த வேஷத்தில் அவளைக் காதலிக்கத் தலைப்படுகிறான் கண்ணப்பன். ஜிப்சி வேஷத்தில் இருந்த கமலி, மிக சாமார்த்தியமாக, தன்னை அவன் மணந்துகொள்வதாக ஓர் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை எடுத்துக் காட்டுகிறாள்.

‘நான்தான் ஜிப்சி, ஜிப்சிதான் நான்!’ என்கிறாள். டாக்டரும் கமலி என் சகோதரிதான் என்கிறார். கண்ணப்பன் கமலி காதல் கைகூடுகிறது.”
(எஸ்.எம். உமர், கலை உலகச் சக்கரவர்த்திகள், பக். 436)

கமலவல்லி நாவலில் தன் அக்காள் பத்மாசனி பாரிஸ்டர் இவர்களின் வற்புறுத்தலுக்கு ஒருவாறு உடன்பட்டுக் கமலவல்லியை மணந்துகொள்கிறான் கண்ணப்பன். ஆனால் திரைப்படத்திலோ கண்ணப்பன், ‘இன்னொருவன் தாலிகட்டிய பெண்’ என்று கமலியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். பிறகு ஜிப்சி வேஷம் போட்டு ஒருவகையில் ஏமாற்றித்தான் கண்ணப்பனை மணக்கிறாள் கமலி.

நாவலுக்கும் திரைப்படத்துக்குமான இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாவல் என்ற படைப்பிலக்கியத்தில் பேசப்படும் மரபுமீறல்களும், சீர்திருத்தங்களும் வெகுசன ஊடகமாம் திரைப்படத்திற்கு என்று வருகிறபோது வழுக்குகிறது. நாவலுக்கும் திரைப்படத்துக்கும் படைப்பாளி ஒருவராய் இருந்தபோதும் இதில் மாற்றமில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில்தான் இந்நிலை என்றில்லை, எண்பதுகளில் சற்றேறக்குறைய இதே கமலவல்லி நாவலின் கதையை தம் சொந்தப் படைப்புபோல் இயக்குநர் கே.பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தபோது, தன்மனைவியைக் காதலித்தவனுக்கு மீண்டும் அவளையே திருமணம் செய்துவைக்கக் கணவன் தயாராக இருந்தாலும் திருமணம் மற்றும் தாலி பற்றிய புனிதங்களிலிருந்து விடுபட இயக்குநர் கே.பாக்யராஜ் தயாராயில்லை. மரபு மற்றும் புனிதங்களை மீறாதவனாகவே காதலனைச் சித்தரிக்கின்றார் அவர்.

எண்பதுகளில் கூடப் படைப்பாளிகள் செய்யத் தயங்கிய மரபுமீறல்களை முப்பதுகளிலேயே செய்துகாட்டிய நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் சகலகலாவல்லி என்ற பெருமைக்குரிய டி.பி.ராஜலட்சுமியின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் நாவல் இலக்கிய வரலாற்றில் அவருக்குரிய தனியிடம் குறித்த பதிவுகள் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் சுவடுகளற்றுப் போகாமல் உரிய கவனம் பெறுதல்வேண்டும்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...