Monday 5 July 2010

புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

புதுச்சேரியில் பௌத்தம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமதம், தமிழகத்தில் பரவி செல்வாக்கு பெற்ற காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கடைச்சங்க நூல்களில் பௌத்தம் குறித்த வெளிப்படையான குறிப்புகள் கிடைக்காத நிலையில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனால் இக்கருத்து பொருந்தாது.

ஏனெனில் மாமன்னர் அசோகர் காலத்திலேயே அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழகத்தில் பரப்பப்பட்டது என்பதற்கான அகச்சான்றாக அசோகரின் கல்வெட்டு ஒன்றனை எடுத்துக்காட்டி நிறுவுகின்றார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அவர் கூறும் ஆதாரம் பின்வருமாறு,

வட இந்தியாவின் பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படும் அசோகரின் சாசனத்தில் (Rock Edict iii) தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியோகஸ் என்னும் யவன அரசருடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை- அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அறவெற்றியைக் கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்டபொருள் என்னவென்றால், அசோகச் சக்கரவர்த்தி தூதர்களை (பௌத்த பிட்சுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பலநாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. (மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப.25)

ஆக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது என அறிகிறோம். தமிழகத்தில் பௌத்தம் பரவப் பணியாற்றியவர் மாமன்னர் அசோகரின் தம்பியாகிய மகிந்தர் என்றழைக்கப்படும் மகேந்திரர் ஆவார்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...