Thursday 26 November 2009

அட! வலைப்பதிவுக்குள்ள இவ்வளவு இருக்கா? -பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




1. வலைப்பதிவுத் தலைப்பு
(Title):

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.

2. வலைப்பதிவு முகப்பு
(Description):

வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (டுநயன) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.

3. பதிவின் தலைப்பு
(Title of the Post):

வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

4. பதிவின் உடல்பகுதி
(Post):

வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...