Wednesday 30 December 2009

சீர்திருத்தம் பேசிய தேசியவாதி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-4

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சீர்திருத்தம் பேசிய தேசியவாதி

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி இந்நாவலை எழுதி வெளியிட்ட ஆண்டு 1931 ஆகும் சற்றேறக்குறைய இக்காலக்கட்டத் தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் இரண்டு வகையான இயக்கங்கள் தோன்றிச் செயலாற்றிக் கொணடிருந்தன. ஒன்று, தேச விடுதலையை மையமிட்ட தேசிய இயக்கம், மற்றொன்று சமூகச் சீர்த்திருத்தங்களில் மையம் கொண்ட திராவிட இயக்கம்.

முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் தமிழகத்தில் தோன்றிய அனைத்துப் படைப்பிலக்கியங்களிலும் இவ்விரண்டு இயக்கப்போக்குகளின் தாக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தமை கண்கூடு. தீவிர அரசியல், தீவிர இயக்கம், தீவிரப் படைப்பாக்கங்களில் செயல்படுவோர் என்ற இத்தகு தீவிரப் போக்குடையவர்களிலிருந்து மாறுபட்டுத் திரைத்துறை சார்ந்து இயங்கும் ஒருவர், அதிலும் ஆதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கத்தினரின் மேய்ச்சலுக்காக மட்டுமே பெண்ணும் பெண்ணின் உடலும் என்று இன்றுவரை இயங்கிவரும் திரைப்படத்துறையில் ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக, படைப்பாளியாக டி.பி.ராஜலட்சுமி வெளிப்பட்டமை வியந்து பாராட்டுதற்குரியது.

காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவராக மேடைகளில் தோன்றி தேசபக்திப் பாடல்களைப் பாடி தேசவிடுதலைக்கு எழுச்சியூட்டும் பணியாற்றி வந்த டி.பி.ராஜலட்சுமி படைப்பிலக்கியத் துறையில் குறிப்பாக நாவல் இலக்கியத்தில் செயலாற்றும் போது முற்றமுழுதாகச் சீர்திருத்த இயக்கக் கருத்தாக்கங்களை உள்வாங்கிப் படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளமை ஓர் அழகிய முரணாகும்.

டி.பி.ராஜலட்சுமியின் அனுபவ வழிப்பட்ட சீர்திருத்தம்

மாயூரம் வேதநாயகர் தொடங்கி டி.பி.ராஜலட்சுமி காலம் வரையிலும் படைப்பிலக்கியங்களில் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்விடுதலை முதலான கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டுவந்தன. படைப்பிலக்கியங்கள் எனும்போது கவிதை இலக்கியங்கள், புனைகதை இலக்கியங்கள் இரண்டிலும் இப்போக்கு காணப்பட்டது. நாவல் படைப்பதற்கு முன்பே, கவிதை இலக்கியங்களில் மேலே சொல்லப்பட்ட உள்ளடக்கங்களைத் தெளிந்த சிந்தனையோடு பதிவுசெய்ததில் முதன்மையானவர் மாயூரம் வேதநாயகரே. அவரைத் தொடர்ந்தே பாரதி, பாரதிதாசன் முதலான கவிஞர்கள் பெண்விடுதலை குறித்துப் பேசத்தொடங்கினர்.

வேதநாயகர் எத்தகைய இயக்கப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலக் கல்வி தந்த அறிவு வெளிச்சத்தில் பெண்விடுதலை பேசினார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பெண்விடுதலை பேசியதில் இயக்கப் பின்னணிகள் இருந்தன. புனைகதைகளில், குறிப்பாக நாவல்களில் பெண்விடுதலை பேசப்பட்டபோது ஆங்கிலக் கல்வி, மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கம் குறித்த விழிப்புணர்வின் விளைவாகவே பெண் விடுதலைச் சிந்தனைகள் பேசப்பட்டன. மாயூரம் வேதநாயகர் தொடங்கி, தொடக்கக்கால நாவல் வரலாற்றில் இப்போக்கினை நாம் காணலாம்.
நாவலாசிரியை டி.பி.ராஜலட்சுமியின் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் மேலே சொல்லப்பட்ட கோணங்களிலிருந்து மாறுபட்டவை.

டி.பி.ராஜலட்சுமியின் முறைசார் கல்வி இரண்டாம் வகுப்புவரைதான், மற்றபடி அவரின் எழுத்தறிவு, புலமை எல்லாம் அனுபவ வழிப்பட்டதே. ஆங்கிலக் கல்விக்குப் பெரிதும் வாய்ப்பில்லை. எனவே டி.பி.ராஜலட்சுமியின் பெண்விடுதலைச் சிந்தனைகளுக்குக் களம் அமைத்தவை அவரின் வாழ்க்கைப் பேராட்டங்களும், அனுபவங்களுமே எனல் பொருந்தும். அதிலும் தம் முதல் நாவலான கமலவல்லியில் அவர் எடுத்துக்கொண்ட பிரச்சனை, பெண்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றியதாயிருப்பது தனித்தன்மை உடையது.

இருபதாம் நூற்றாண்டின்; தொடக்ககாலப் படைப்புகள் மிகுதியும் பேசிய பெண்கல்வி, கைம்பெண்டிர் மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு போன்ற உள்ளடக்கங்களிலிருந்து மாறுபட்டு, ஒருபெண் விருப்பமின்றி வேறு ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும் அப்பெண் அத்திருமண வாழ்வில் ஈடுபடாமல் திருமணம் செய்துகொண்ட கணவனின் துணையோடு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தன்னுடைய காதலனையே மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக நாவலைப் படைத்துள்ளமை டி.பி.ராஜலட்சுமியின் புரட்சிகரமான சிந்தனைக்குச் சான்றாகிறது.

கணவன் இறந்தபிறகு பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வலியுறுத்தும் விதவைத் திருமணம் போன்ற மரபு மீறல்களிலிருந்து டி.பி.ராஜலட்சுமி தம் நாவலில் கையாண்ட மரபு மீறல் முற்றிலும் புதுமையானது. கணவன் உயிருடன் இருக்கும்போதே ஒருபெண் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்வது. பலர் அறிய மறுமணம், அதுவும் கணவனின் துணையோடு. இவ்வுள்ளடக்கம் அவர் காலத்தில் புதிது, புதுமையானது.
இத்தகு புதிய மரபு மீறலுக்கான நியாயங்கள் நாவலில் பேசப்படுகின்றன. நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி, நாவலில் ஆசிரியர் கூற்றாக இவ்விவாதங்களைப் பதிவுசெய்யாமல் பாத்திரங்களின் கூற்றாகவே பதிவு செய்திருப்பது அதன் கட்டுக்கோப்பில் வெகுஇயல்பாகப் பொருந்திக் கொள்கிறது.

கமலவல்லியின் மறுமணத்திற்கு உடன்படும் அவளின் கணவன் டாக்டர் சந்திரசேகரனிடம் இப்பிரச்சனை குறித்துத் தீவிரமாக விவாதிக்கின்றார் பாரிஸ்டர் பகதவச்சலம். அவ் உரையாடலின் ஒருபகுதி பின்வருமாறு,

பாரிஸ்டர்: உங்களுக்குக் கமலவல்லியின் நடத்தைகள் பிடிக்காமல்தானே! இப்போது அவளுடைய நிர்ப்பந்தத்திற்காக அவள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டுமென்று அனுமதிக்கின்றீர்கள்?

டாக்டர்: கமலவல்லி வெறுக்கத்தக்க குணங்களுள்ளவளல்ல. இன்னும் பார்த்தால் குணவிசேடங்களிலும் மதிநுட்பத்திலும் அவள் மிக மேம்பாடானவள். கல்யாண விஷயத்தில் ஆணாயிருந்தாலும் சரியே, பெண்ணாயிருந்தாலும் சரியே, அவரவர் தத்தம் மனசாட்சியின்படி சர்வசதந்திரமாய் நடக்க விட்டுவிடுவதே மேன்மையாகும். இந்த விசாலமான நோக்கத்தினாலேயே நான் கமலவல்லி மறுபடியும் கண்ணப்பனை விவாகம் செய்துகொள்ள என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 107)

பாரிஸ்டர்: பகிரங்கமாய் ஒருவரை மணம் செய்துகொண்ட ஒரு பெண், வேறொருவருடன் வாழ்ந்திருக்கும்படி செய்வது முறையாகுமா?

டாக்டர்: ஏன் முறையாகாது? விவாகமென்பதே ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கையை முன்னிட்டுச் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தந்தானே. நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது?

குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாபமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 108-109)

டாக்டர் சந்திரசேகரனின் கருத்துக்களாக வெளிப்படுவது நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் குரலே. உடல் வலிமையாலும் அறிவாலும் எல்லாவகையிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருபடி தாழ்ந்தவர்களே என்ற கருத்து வலிமை பெற்றிருந்த ஒரு சமூகத்தில் “பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப்படுத்துகிறோம்.” என்ற நாவலாசிரியரின் எதிர்க்குரல் எத்துணை அழுத்தமாகவும் உரத்தும் ஒலிக்கின்றது.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து, “பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.” என்று நாவலாசிரியர் பேசுவது பெண்ணடிமைச் சமூகம் பற்றிய அவரின் தார்மீகக் கோபத்தின் உச்சம் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

Tuesday 22 December 2009

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி -சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி:

“தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” நூலை எழுதிய பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல் படைப்புகளைப் போகிறபோக்கில் பின்வருமாறு (ப. 144)சுட்டிச் செல்கின்றனர்.

“அதே ஆண்டில் (1931) மற்றொரு பெண்மணி தென்னிந்திய நாடக மேடைகளிலும் சினிமா காட்சிகளிலும் பிரசித்தி பெற்ற டி.பி. ராஜலட்சுமி, “கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் சமூக முன்னேற்றக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கமலவல்லியை டாக்டர் சந்திரசேகரன் காதலிப்பதும் உமையப்பன் என்ற தீயவனால் பல இடையூறுகள் ஏற்படுவதும் பின்னர் பிறர் உதவியால் யாவும் சுபமாய் முடிவதும்தான் கதை. ஆனால் இந்த நாவலின் பின்அட்டையில் காணப்படும் விளம்பரத்தில், ‘இது அனுபவ ஞானக் கலா விலாசங்கள் நிறைந்திலங்கும் அமிர்தச் சுவையுள்ள அழகிய தமிழ் நாவல்’ என்று காணப்படுவதால் ஆசிரியை வளர்ந்த சூழ்நிலையின் சமகாலச் சமூகச் சித்திரம் என்றுதான் கொள்ளப்படலாம். இவர் மற்றும் ஐந்து நாவல்கள் எழுதியதாக ஒரு விளம்பரம் குறிப்பிடுகிறது.”
சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகிய இந்நூலாசிரியர்கள் மறவாமல் டி.பி.ராஜலட்சுமியை ஒரு நாவலாசிரியராகப் பதிவு செய்துள்ளமை காலத்தினால் செய்த உதவியாகும்.

இந்நூலைத் தவிர நாவல் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரலாற்று நூல்கள் மற்றும் நாவல் விளக்க நூல்கள் எவற்றிலுமே டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல்கள் குறித்த பதிவு இடம்பெறாதது ஒரு வரலாற்றுச் சோகமே. (என்னுடைய பார்வை எல்லைக்குட்பட்ட நூல்களில்)

இணையதள தமிழ் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/wiki/- “டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகையும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். --- --- ராஜலட்சுமி எழுதிய முதல் புதினம் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்பதாகும். விமலா, மல்லிகா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் ஆகியவை இவர் எழுதிய மற்ற நாவல்கள்”
என்று குறிப்பிட்டுள்ள செய்தி நாவல் ஆய்வாளர்களுக்கும் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் அரிய செய்தியாகும்.

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்:

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் முதல் நாவல் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் ஆகும். இவர் இந்நாவலைத் தம் இருபதாவது வயதில் எழுதியுள்ளார். டி.பிராஜலட்சுமி கதாநாயகியாக நடித்துத் தமிழின் முதல் பேசும்படம்; வெளிவந்த அதே ஆண்டில் (1931) டி.வி. பாலகிரு~;ண நாயுடு என்பவரால் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள்’ என்ற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சென்னை ஆவணக் காப்பகத்தில் நூல்களைத் தேடித் திரட்டியபோது இந்நூலைக் கண்டெடுத்ததாகவும் பின்னர் இந்நாவலின் தனித்தன்மைகளை உணர்ந்து புலம் பதிப்பகத்தின் வழியாக இந்நாவலைப் பதிப்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார் இந்நூலின் புதிய பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள்.

புதிய மறுபதிப்பு

டி.பி.ராஜலட்சுமி
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
பதிப்பாசிரியர் ப.பத்மினி
புலம் வெளியீடு
மதுரவாயல், சென்னை- 95
முதல்பதிப்பு மார்ச் 2009

என்ற பதிப்புத் தகவல்களோடு வெளிவந்துள்ளது.

இந்நூலின் பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள் இந்நாவலின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது,

“திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களில் இவரைத்தவிர இலக்கிய உலகில் வேறு யாரும் பிரவேசித்ததுபோல் தெரியவில்லை. இவருக்குப் பின்வந்த திரைப்படப் பெண் நடிகர்களில் பலர் தம்முடைய வாழ்க்கையைப் பத்திரிக்கைகளில் தொடர்களாக மட்டுமே வெளியிட்டனரேயன்றி இவரைப் போன்று சமூக உணர்வுடன் கூடிய இலக்கியப் படைப்பை அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த இவரின் படைப்போ சமூக உணர்வுடன் கூடியதாக இருப்பதைக் காணலாம்.”
(ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக் 9-10)

என்று குறிப்பிடுவதோடு இந்நூலை மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவதற்கான காரணங்களாகப் பதிப்பாசிரியர் ப.பத்மினி இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.

ஒன்று, கலைப்பட்டறையில் வாழ்ந்திருந்தாலும் யதார்த்தத்தில் சிந்திக்கும்போது அன்றைய பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிகவும் துணிச்சலோடு இப்படைப்பைப் படைத்திருப்பது வியப்புக்குரியது.

இரண்டு, இந்திய விடுதலைக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பலர் எழுதிய படைப்புகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியவையாக இருந்துள்ளன. சில படைப்புகள் சமூக மாற்றங்களை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்துள்ளன. இது குறித்துப் பெரிதாகப் பதிவுகள் செய்யப்படவில்லை. இந்நாவல் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கும் (ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக். 10-11)

நூலமைப்பு:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இரட்டைத் தலைப்பிடும் முறை வழக்கத்திலிருந்தது. பத்திரிக்கைகளில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் தொடங்கி, நாவல் தலைப்புகள், சிறுகதைத் தலைப்புகள், நூலின் தலைப்புகள், திரைப்படத் தலைப்புகள் என அனைத்துத் தலைப்புகளும் இரண்டிரண்டாக இடப்படுவது வழக்கம். முதல் தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடையே அல்லது என்றசொல் இடம்பெறும். இம்மரபைப் பின்பற்றி இந்நாவலுக்கும் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என இரட்டைத் தலைப்பு இடப்பட்டுள்ளது.

நாவல் பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாத்திற்கும் நாவலாசிரியராலேயே பொருத்தமான கவித்துவமிக்க தலைப்பிடப்பட்டுள்ளது. (காட்டேரியும் கருப்பண்ணசாமியும், சுவர்க்கவாசலும் அம்பிகைசேனையும், பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்பன போன்ற தலைப்புகள்) முதல் நான்கு பகுதிகள் மட்டும் அதிகாரம் என்ற பெயரிலும் ஐந்துமுதல் பதினாறு வரையிலான பகுதிகள் அத்தியாயங்கள் என்ற பெயரிலும் பகுக்கப்பட்டுள்ளன.

நாவலின் கதைப் பாத்திரங்கள்:

கமலவல்லி - கதைத் தலைவி
கண்ணப்பன் - கமலவல்லியின் காதலன்
மகாலிங்கம் - கண்ணப்பனின் நண்பன்
டாக்டர் சந்திரசேகரன் - கமலவல்லியின் கணவன்
பத்மாசனி - கண்ணப்பனின் தமக்கை
பாரிஸ்டர் பக்தவசலம் - பத்மாசனியின் கணவர்
செல்வாம்பாள் - பாரிஸ்டர், பத்மாசனி இவர்களின் மகள்
சோமசுந்தரம் பிள்ளை - கமலவல்லியின் வளர்ப்புத் தந்தை
மாணிக்கவல்லி - கமலவல்லியின் வளர்ப்புத் தாய்
உமையப்பன் - கமலவல்லியை விலைபேசும் முரடன்

கதைச் சுருக்கம்:

இந்நாவலின் கதைத்தலைவி கமலவல்லியும் கண்ணப்பனும் காதலர்கள். கமலவல்லியின் வளர்ப்புப் பெற்றோர் ரூபாய் 5000 பணம் பெற்றுக் கொண்டு அவளை டாக்டர் சந்திரசேகரனுக்கு வலிந்து மணம் செய்து வைக்கின்றனர். முதலிரவில் கமலவல்லி டாக்டர் சந்திரசேகரனிடம் தான் கண்ணப்பனைக் காதலிக்கும் செய்தியைச் சொல்லி கண்ணப்பனோடு தன்னைச் சேர்த்துவைக்க வேண்டுமென்று வேண்டுகிறாள். சந்திரசேகரனும் உடன்படுகிறான். மீண்டும் வளர்ப்புப் பெற்றோர் வசம்வந்த கமலவல்லியை உமையப்பன் என்ற முரடன் ஒருவனுக்கு மணம்முடிக்க அவர்கள் முயற்சி செய்ய, கமலவல்லி அவ்வீட்டைவிட்டுத் தப்பிவந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.

அவளைக் காப்பாற்றித் தம் வீட்டில் அடைக்கலம் தருகின்றனர் பாரிஸ்டர் பக்தவச்சலமும் அவரது துணைவியார் பத்மாசனியும். பாரிஸ்டர் பத்மாசனி இணையரின் முயற்சியால் டாக்டர் சந்திர சேகரனின் துணையோடு கமலவல்லி கண்ணப்பன் திருமணம் பல போராட்டங்களுக்கிடையே நடந்தேறுகிறது. டாக்டர் சந்திரசேகரன் பாரிஸ்டர் மகள் செல்வாம்பாளைக் காதலித்து மணமுடிக்கிறார்.

காதலித்தவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள் ஒருபெண். அவள் கணவன் தன்மனைவி வேறு ஒருவனின் காதலி என்பதை அறிந்தவுடன் அவளின் காதலனுக்கே அவளை மணமுடித்து வைப்பதாகச் சொல்லும் புதுமையான கருத்தே கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலின் கதைக்கரு.

Monday 21 December 2009

தமிழின் முதல் பெண் இயக்குநர் - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

முதல் பெண் இயக்குநர்:

1931 தொடங்கி 1950 வரை தொடர்ந்து இருபத்திரண்டு படங்களில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானதாகக் காளிதாஸ் (1931), கோவலன் (1933), வள்ளித் திருமணம் (1933), குலேபகாவலி (1935), ஹரிச்சந்திரா (1935), மிஸ்.கமலா (1936), நந்தகுமார் (1939), மதுரை வீரன் (1939), ஜீவஜோதி (1947), இதயகீதம் (1950) போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

காளிதாஸைத் தொடர்ந்து 1932 இல் ராமாயணம் என்ற படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்தார். இப்படத்தில் டி.எஸ். மணிக்கு இராமன் வேடம். டி.பி.ராஜலட்சுமிக்கு சூர்ப்பனகை, சீதை என்று இரண்டு வேடம். ஒரே படத்தில் முதன்முதலில் இரண்டு வேடங்களில் தோன்றி மக்களை அதிசயிக்க வைத்த பெருமையும் இவருக்கே உண்டு.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து, பாடி, பேசி வெற்றிக்கொடி நாட்டிய டி.பி. ராஜலட்சுமி 1936 இல் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிமாணங்களோடு மிஸ். கமலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். மிஸ். கமலா திரைப்படத்தின் கதாசிரியரும் அவரே, அவரே திரைக்கதை அமைத்து உரையாடல்களையும் எழுதினார். இப்படத்திற்கான பாடல்களை எழுதியதோடு கதாநாயகி வேடமேற்று பாடி, நடிக்கவும் செய்தார். டி.பி.ராஜலட்சுமியே தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர். முதல் பெண் இயக்குநர்.

மிஸ். கமலா திரைப்படத்திற்கு

நடிப்பு
பாடகர்
பாடலாசிரியர்
கதை
திரைக்கதை
உரையாடல்
இயக்கம்
தயாரிப்பு

ஆகிய பல பணிகளை ஏற்றுத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாகத் திறம்படச் செயல்படுத்திக் காட்டிய பெருமை டி.பி.ராஜலட்சுமி அவர்களையே சாரும். 1936 லேயே இந்திய, தமிழகத் திரைப்பட உலகின் சகலகலாவல்லி என்ற பெரும்புகழ் பெற்றவர் அவரே. தமிழ்த்திரையுலகம் அவரைச் சினிமா ராணி எனக் கொண்டாடியது.

இந்தச் சாதனை குறித்து 1956 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா இதழின் தீபாவளி மலரில் டி.பி.ராஜலட்சுமி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு.

“இப்படி ஆரம்பமான எனது நட்சத்திர வாழ்க்கைத் தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ‘வள்ளி’ எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டுத் தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு பழக்கம் எனக்கு ஏற்பட்டிராது. அந்தச் சமயத்தில்தான் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் மிஸ். கமலா. அதன் கதை, வசனம், பாடல்கள், டைரக்~ன் அனைத்தையுமே நான்தான் கவனித்துக் கொண்டேன். தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களையும் தயாரித்தேன்.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக் 95-96)

அனுபவத்தையே ஆசானாகக் கொண்டு சாதித்துக் காட்டிய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற திரைப்படம் சார்ந்த ஆளுமைகளுக்கு வெளியே ஒரு சிறந்த படைப்பாளியாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது தமிழிலக்கிய உலகில் மறக்கப்பட்ட செய்தி.

Sunday 20 December 2009

சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:
தமிழ்த் திரைப்படங்கள் பேசத்தொடங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை தமிழின் முதல் பேசும்படம் வெளியானது. திரைப்படத்தின் பெயர் காளிதாஸ்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சுதேசமித்திரன் இதழில் வெளியான காளிதாஸ் திரைப்பட விளம்பரம் இது.

கினிமா சென்டிரல்
1931-ம் வருஷம் அக்டோபர் மாதம்31-ம் தேதி சனி முதல்
தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட
முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள்
மிஸ். டி. பி. ராஜலட்சுமி நடிக்கும்
“காளிதாஸ்”
முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி
இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது
உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள்
பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்

(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, ப.41)

இத்திரைப்பட விளம்பரத்தில் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ் என்று விளம்பரப்படுத்தப் பட்டிருப்பதைக் கவனித்தால் தமிழ்த்திரைப்பட உலகுக்கும் டி.பி.ராஜலட்சுமிக்கும் உள்ள தொப்புள்கொடி உறவுபுரியும். வழக்கமாகக் கதாநாயகர்களைக் கொண்டே திரைப்படங்கள் விளம்பரப் படுத்தப்படும் மரபை மீறித் தமிழின் முதல் திரைப்படமே கதாநாயகியை முன்னிறுத்துவது கவனத்திற்குரியது. அதற்குக் காரணம், காளிதாஸ் முதல் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்ல முதல் தெலுங்குத் திரைப்படமும் கூட. இப்படத்தில் கதாநாயகி வித்யாதரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசுவாள், பாடுவாள். கதாநாயகன் காளிதாசன் தெலுங்கில் பேசுவான், பாடுவான். வேறு சில துணைப் பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள்.

ஆக முதல் தமிழ்ப்படத்தில் உருப்படியாகத் தமிழில் பேசி, பாடியவர் டி.பி.ராஜலட்சுமிதான். எனவே தமிழ்த்திரைப்பட வரலாறு டி.பி.ராஜலட்சுமியிலிருந்துதான் தொடங்குகிறது.
1931 அக்டோபர் 31 இல் பொதுமக்கள் பார்வைக்குக் ‘காளிதாஸ்’ வருமுன்னரே அக்டோபர் 29 ஆம் தேதியிட்ட சுதேசமித்திரன் நாளேட்டில் வெளியான ‘காளிதாஸ்’ திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி,

“தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ். டி.பி.ராஜலட்சுமி முதல் முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்."

"நாடக மேடையில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜ கிருதிகளான, எந்தரா நீதானோ, சுராக சுதா என்றவிரு பாட்டுக்களையும் ஹரி காம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். இதைத் தவிர “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண்சண்டை”, “ராட்டினமாம் காந்தி கைபாணமாம்” என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாகவிருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக். 42-43)

சுதேசமித்திரன் விமர்சனத்தில் காளிதாசனாக நடித்த தெலுங்குக் கதாநாயகனின் பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை.

முதல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசி, பாடி நடித்துப் புகழ்பெற்ற டி.பி.ராஜலட்சுமி முதன்முதலாகச் செய்து சாதித்த சாதனைகள் பலப்பல.

இவர் 1911 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதியன்று திருவையாறு சாலியமங்கலம் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். ஏழு வயதிலேயே சுந்தரம் என்பவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். திருமண வாழ்க்கை ஒன்றிரண்டு வருடங்கிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. வரதட்சணைக் கொடுமை அல்லது சுந்தரத்தின் மரணம், ஏதோவொன்று தெளிவான குறிப்புகளில்லை. பிறந்தகம் மீண்டார். மீண்டும் சோதனை தந்தையாரின் அகால மரணம். விதவைத் தயாரோடு வாழ்க்கையை இழந்த டி.பி.ராஜலட்சுமி வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். திருவையாறு தந்த இசைப்புலமை கைகொடுக்க நாடகத்துறையை நாடினார்.

டி.பி.ராஜலட்சுமி தமது பதினோராம் வயதில் நாடகக் கம்பெனிகளில் காலடி எடுத்துவைத்தார். நாடக உலகம் இருகரம் நீட்டி அவரை வரவேற்று அரவணைத்துக் கொண்டது. முதலில் அவர் மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி நாடகத்தில் பவேந்திரன் பாத்திரத்தில் தம் பதினோராம் வயதில் நடிக்கத் தொடங்கினார் டி.பி.ராஜலட்சுமி.

இவருக்கு முன் நாடகமேடைகளில் பெண்கள் நடிக்கும் பழக்கம் கிடையாது. ஆண்களே பெண்வேடம் புனைந்து நடிப்பார்கள். முதன்முதலாக நாடகமேடையில் தோன்றி நடித்த பெண் என்ற பெருமைக்குரியரானார் டி.பி.ராஜலட்சுமி. கடல்கடந்த நாடுகளிலும் குறிப்பாக, மலேசியா, இலங்கை முதலான நாடுகளுக்குச் சென்று நாடகமேடைகளில் பாடி, நடித்துப் பெரும்புகழ் பெற்றார். இந்தவகையிலும் இவரே முதல்பெண்மணி என்ற பெருமை பெறுகின்றார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் கோவலன் நாடகத்தில் மாதவி வேடத்தில் டி.பி.ராஜலட்சுமி தோன்றி நடித்த நாடகத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாத்மா காந்தி அவரின் நடிப்பைப் பாராட்டி ஒரு புலி பொம்மையைப் பரிசளித்தார் என்றும் டி.பி.ராஜலட்சுமி தன்கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று வழங்கினார் என்றும் எஸ்.எம். உமர் அவர்கள் தம் ‘கலை உலக சக்ரவர்த்திகள்’ என்ற நூலில் (ப. 434) குறிப்பிடுகின்றார்.

ஒரு நடிகையாகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தபோதும் அவர் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. பொதுவாழ்வில் நாட்டம் கொண்டவராகவும் சமூக அக்கறை உடையவராகவும் தேச விடுதலைக்குப் பணியாற்றுபவராகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு பணியாற்றியமை மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

டி.பி.ராஜலட்சுமி காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த நாட்டமுடையவராகவும் தேச விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புக் கொண்டவராகவும் இருந்துள்ளார். இவர் நாடகங்களில் நடிக்கும் காலங்களில் நாடகம் முடிந்தவுடன் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இதன் காரணமாகப் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Sunday 6 December 2009

விளம்பரங்கள் காட்டும் வாழ்க்கை யாருடைய வாழ்க்கை?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:

விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?

விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.

இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன.

முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.

ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.

விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.

Saturday 5 December 2009

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

ஒவ்வொரு விளம்பரத்தையும் தனித்தனியாகப் பார்த்து அவற்றின் செல்வாக்கை, தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்வது ஒருவகை அணுகுமுறை. ஒட்டுமொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் கூர்ந்து கவனித்து அவைகளைப் புரிந்துகொள்ள முயல்வது மற்றொரு அணுகுமுறை. இவ்விரண்டாம் அணுகுமுறையிலேயே விளம்பரங்களின் முழுமையான அரசியலை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியம்.

நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்களாயினமை எப்படி?

ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.



மேலே உள்ள விளம்பரம் 1953 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தது. சென்ட்ரல் டீ போர்டாரால் வெளியிடப்பட்ட அவ்விளம்பரம் “இரவு பகல் எந்த வேளையிலும், எந்த நிலையிலும் தேனீர் உற்சாகம் அளிக்கிறது” என்ற வாசகத்தோடு தேனீர் குடிக்க ஆலோசனை கூறுகிறது.

உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்.

Friday 4 December 2009

எது நுகர்வுக் கலாச்சாரம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

எது நுகர்வுக் கலாச்சாரம்:

பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம்.

இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.

நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள்.

புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...