Friday 9 October 2009

மனிதத் தின்னிகள்

மனிதத் தின்னிகள் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.
வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.
எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.
செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.
செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.
கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.
ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?
என்ன செய்திகள் இவை?
இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.
வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.
குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.
மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு
நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு
கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்
இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…
பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...