Tuesday 27 October 2009

எதைச் சாதிக்க இந்த வலைப்பதிவுகள்?

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.

ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.

இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவுஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின.

கணிப்பொறி சார்ந்த D.T.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின.

புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு ஊடக அதிகாரங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.

1 comment:

  1. ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்த மாதிரி இருக்கிறது? தொடர் பதிவா? நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...