Tuesday 21 May 2019

மேகமலை -ஹைவேவிஸ் -மலைப்பயணம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. உயர்ந்த மலைகள் மிக ஆழமான பள்ளத்தாக்கு, அழகிய ஏரிப்பகுதிகள் என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது.
எட்டுத்திசையும் மலைச்சிகரங்களால் சூழப்பட்ட இயற்கையான பசுமைப் பள்ளத்தாக்கே மேகமலை. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த நிலஅமைப்பு கொண்டது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இம்மலை முழுவதும் 'மேகங்களால் சூழப்பட்டு மேகங்களின் தொட்டிலாக விளங்குவதால் மேகமலை' என்று பெயர் பெற்றதுபோலும்.
பசுமையான நிலப்பரப்புடன் வானுயுர்ந்த மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது இந்த வனப்பகுதி.
ஆரம்ப காலங்களில் மேகமலை - ஹைவேவிஸ் மலைப்பாதை இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் (லிப்டன் கம்பெனி) ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் இந்தப் பாதையை சரியாகப் பராமரிக்க முடியாததால் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்திடம் சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தது. தற்போது ஹைவேவிஸ் வரை, அங்கே புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேகமலையை அடுத்து ஹைவேவிஸ் உள்ளது. அங்கே பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்குக் கூட்டங்களைக் கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.

முனைவர் நா.இளங்கோ - லியாகத் அலி

முனைவர் நா.இளங்கோ - மேகமலை

மேகமலை

மேகமலைப் பயணம்
மேகமலைப் பயணத்தில் நானும் நண்பர் லியாகத் அலியும் உடன் வந்த பேராசிரியர் பழனிவேலு மற்றும் ஓட்டுநர் சித்திக் நால்வரும் இயற்கை அழகை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கே தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களோடும் கொஞ்சம் அளவளாவினோம்.
மேகமலையின் தேயிலைத் தோட்டங்கள் தொடக்கத்தில் லிப்டன் கம்பெனி வசம் இருந்தன. அப்போது தொழிலாளர் களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, குடிநீர், சாலைப் போக்குவரத்து முதலான அனைத்து வசதிகளையும் கம்பெனி நிர்வாகமே செய்து வந்தது.
பின்னர் நிர்வாகம் பல கைகளுக்கு மாறிவிட்டன. இந்த நிர்வாக மாற்றங்களால் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளுக்கே திண்டாட வேண்டிய நிலைமையாகி விட்டது. இப்போது எல்லாவற்றிற்கும் அரசை எதிர்ப்பார்க்க வேண்டிய அவல நிலை. நீண்ட போராட்டத்திற்குப் பின் மொத்தம் உள்ள 48 கிமீ மலைப் பாதையில் சுமார் 35 கிமீ சாலை இப்போதுதான் சீரமைக்கப்பட்டுள்ளது என அறிந்தோம்.
மேகமலையில் சிஎஸ்ஐ நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் நால்வரும் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை முத்துமணி, இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதி தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
இந்த இடத்தில் தோழர் லியாகத் அலியின் பின்வரும் பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
-----------------------------------------------------------
இந்த குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள் மேதாவிகள்.
இன்னும் கல்விக்குச் சலுகை காட்ட வேண்டிய நிலை இங்கிருக்க, 25 மாணவர்களுக்குக் குறைவாக இருக்குற பள்ளிக்கூடத்தை மூடுங்கிறியே, அப்படி செஞ்சா இந்த பயபுள்ளைக எந்த இன்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போகும்.
---------------------------------------------------------------
முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

மேகமலைக் குடியிருப்பு

மேகமலை

மேகமலையில் சிஎஸ்ஐ (CSI) நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
அங்கே வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளோடு கொஞ்சநேரம் பேசினோம். அவர்களுக்குத் தெரிந்த கதை, பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்.
ஒரு பாடல் பாடுங்கள் என்று நான் கேட்டவுடனே குழந்தைகள் குழுவாக ஔவையாரின் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற பாடலைப் பாடினார்கள். (காணொலி இணைத்துள்ளேன்) வேறென்ன சொல்ல.. மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி...
நாளைய இந்தியா இவர்கள்தான்.
இங்கே இரண்டே சாதிதான்.
கல்வி கொடுப்பவர் பெரியோர்.
தடுப்பவர் இழிகுலத்தார்..


முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...