Monday 5 July 2010

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அரிக்கமேடு - பெயர்க் காரணம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அரிக்க மேடு:

புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும் கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே வங்காள விரிகுடாவை ஒட்டி வராகநதி எனப்படும் செஞ்சியாற்றங் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான பகுதியே அரிக்கமேடு.
அரிக்கமேடு பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கே.ஆர். சீனிவாசன் தம் வாழ்வியல் களஞ்சியக் கட்டுரையில் அரிக்கமேடு என்பது அருக்குமேடு (Mound of ruins)அல்லது அருகுமேடு (Mound on ariver bank)என்பதன் திரிபாகலாம் என்கிறார். (வாழ்வியல் கலைக் களஞ்சியம் தொகுதி-1, ப. 732) ஆற்றின் போக்கால் அரிக்கப்பட்ட கரை என்பது இன்றைய நிலை. இன்றைய நிலையை விளக்கும் பெயர்க் குறியீட்டை அன்றைக்கே அப்பகுதிக்கு இட்டு வழங்கியிருப்பார்கள் என்ற விளக்கம் பொருத்தமாயில்லை.

களப்பிரர் காலத்துச் சமணசமய ஆக்கிரமிப்பின் காரணமாகத் தமிழகத்தில் நுழைந்த அருக வழிபாடு பொதுகே பகுதியில் நிலைபெற்றதால் பண்டைய பொதுகே என்னும் பெயர் மறைந்து அருகன்மேடு என்னும் பெயரே பரவலாக வழங்கப்படலாயிற்று, அருகன்மேடு என்னும் பெயரே காலப்போக்கில் மருவி அரிக்கமேடு என்றாயிற்று என்பார் முனைவர் சு.தில்லைவனம் (புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.23).

இக்கூற்றுக்கு, இப்பகுதியில் கிடைத்த புத்தர் சிலையை அருகன் சிலை என்று தவறாகக் கணித்துச் சான்று காட்டுவார் அவர். அவர் சான்று காட்டும் சிலை புத்தர் சிலையே என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே முனைவர் சு.தில்லைவனம் அவர்களின் கூற்று பொருந்தாது.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...