Tuesday 13 July 2010

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன் மேடும் சாக்கையன் தோப்பும்:

அரிக்கன்மேடு என்ற பெயரால் வழங்கப்படும் புதையுண்ட நகரம் அருக்கன் மேடே என்பதும் அங்குள்ள பழைய சிலை புத்தர் சிலையே என்பதனையும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு அகச்சான்று அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு என்ற ஊர்ப்பெயராகும்.

காக்காயன் தோப்பு என்ற பெயரால் அறியப்படும் அவ்வூர் முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப் பட்டிருக்கலாம். சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும். செஞ்சியாற்றின் கிழக்கு மற்றும் தெற்குக் கரைகளில் அருக்கன்மேடு அமைந்திருப்பதும் அருக்கன்மேட்டை ஒட்டிய தென்பகுதி நிலப்பரப்பாகச் சாக்கையன் தோப்பு அமைந்திருப்பதும் புத்தர் வழிபாடு இப்பகுதிகளில் பெருவழக்காய் இருந்திருக்கக் கூடும் என்பதனை உறுதி செய்கின்றன.

அருக்கன் மேடும் மேல் சாத்தமங்கலமும்:

இன்றைய புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் வில்லியனூருக்கு அருகே வில்லியனூர் ஏம்பலம் சாலையில் உள்ள ஊர் மேல்சாத்தமங்கலம். சாத்தன் என்ற சொல்லும் மங்கலம் என்ற சொல்லும் புத்த மதத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் சொற்களாகும். சாத்தமங்கலம் என்ற பெயரே அவ்வூர் ஒரு பௌத்த ஊர் என்பதனை வெளிப்படுத்தும்.

மேல் சாத்தமங்கலத்தில் இந்தியத் தொல்பொருள் துறையின் தென்பகுதிப் பொறுப்பாளர்கள் 26-2-83 முதல் 6-3-83 முடிய அகழ்வாய்வு மேற்கொண்டார்கள். அவ்வகழ்வாய்வில் சாத்தமங்கலத்தின் தொன்மை குறித்த அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வகழ்வில் உடனிருந்து பணியாற்றிய வில்லியனூர் வேங்கடேசன் தரும் செய்திகள் மிகவும் இன்றியமையாதன.

“இரண்டு மீட்டர் சதுரத்தில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் சோதனைக்குழி தோண்டப்பட்டது. அதில் பல அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கிடைத்த பொருள்கள்: கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பெற்ற ஓடுகள், ரௌலட்டட் என்றழைக்கும் ரோமாபுரியில் செய்த மட்பாண்ட ஓடுகள், ஆம்போரா என்றழைக்கப்பெறும் மது ஜாடிகளின் துண்டுகள், ஜாடியின் மூடிக் குமிழ்கள், வழவழப்பான ஓட்டுத் துண்டுகள், மெகலித்திக் காலக் கட்டத்தைச் சேர்ந்த ஓடுகள்” (வரலாற்றில் அரிக்கமேடு, ப. 147)

மேல் சாத்தமங்கலத்தில் கிடைத்த அத்துணைப் பொருள்களும் நமக்கு அருக்கன் மேட்டில் கிடைத்த புதைபொருட்களையே ஒத்திருக்கின்றன. அருக்கன் மேட்டின் காலத்தை ஒத்த கி.பி. முதலிரு நூற்றாண்டுகளின் நாகரீகச் சின்னங்களே சாத்தமங்கலப் புதைபொருட்கள் என்பது தெளிவு. அருக்கன்மேட்டு நாகரிகமே சாத்தமங்கலம் வரை பரவியிருந்தமை தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப் படுத்தப்பட்ட நிலையில் அருக்கன்மேடு தொடங்கிச் சாத்தமங்கலம் வரை பௌத்த மதமே பெருவழக்கு பெற்றிருந்தது என்று துணிய இடமுள்ளது.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...