Tuesday 13 July 2010

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

பௌத்தம் அழிக்கப்பட்டது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பௌத்தம் அழிக்கப்பட்டது:

புதுச்சேரியில் பௌத்தமதம் பெருவழக்காயிருந்த வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் பிற்காலத்தில் பௌத்த விகாரைகளும் பௌத்தமும் பௌத்தமத அடையாளங்களும் மத வன்முறைகளால் திட்டமிட்டுத் தாக்கி அழிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில சான்றுகள் புதுவைப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த, மேலும் இரண்டு புத்தர் சிலைகள் புதுவையில் கிடைத்துள்ளன. ஓன்று, புதுவை அரசின் பழைய பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் மற்றொன்று கருவடிக்குப்பம் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு சிலைகளுமே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ள கழுத்து வரையிலான கருங்கல் சிலைகளாகும்.

அருக்கன்மேட்டுப் புத்தர் சிலை குறித்து P.Z. பட்டாபிராமன் தந்துள்ள வருணனைகளை முற்றிலும் ஒத்ததாக இச்சிலைகள் உள்ளன. சிலையின் இடுப்பில் ஒரு வேட்டியும் மார்பில் மடித்துப் போடப்பட்டுள்ள துண்டும் காணப்படுகின்றன. பத்மாசன முறையில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிலைகளில் பகவான் புத்தர் இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் அமர்ந்துள்ளார்.

இந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் மட்டுமல்லாமல் கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)

இப்படிப் புத்தர் சிலையின் துண்டிக்கப்பட்ட உடல் மற்றும் தலைப்பகுதிகள் புதுவைப் பகுதிகளில் கிடைப்பதிலிருந்து பௌத்த மதமும் மத அடையாளங்களும் பிற்காலத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை உறுதியாகின்றது.

மேலே குறிப்பிட்டுள்ள இம்மூன்று புத்தர்சிலையின் பகுதிகளும் தற்போது புதுச்சேரி அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதோடு பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...