Monday 5 July 2010

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

அருக்கன்மேடு – அரிக்கமேடானது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேடு – அரிக்கமேடானது:

அரிக்கமேடு பெயராய்விற்கும் சமயப் பின்னணி குறித்த ஆய்வுகளுக்கும் தக்க ஆதாரமாயிருக்கும் குறிப்பிட்ட அப்புத்தர் சிலை குறித்த ஆய்வு முதலில் முக்கியத்துவம் பெறுகின்றது. புதுச்சேரி வரலாற்றாய்வாளர் P.Z. பட்டாபிராமன் 1956 மே மாதம் வெளியான ‘லெ த்ரே துய்னியம்’ le trait-d’union என்ற மாத இதழில் எழுதியுள்ள கட்டுரை இச்சிலை புத்தர் சிலையே என்பதனையும் இம்மேடு அரிக்கன்மேடே என்பதனையும் உறுதிசெய்கின்றது.

கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் மேற்கோள் காட்டும் பகுதி பின்வருமாறு,

“அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு என்ற ஒரு பெருமணல்மேடு அரியாங்குப்பம் ஆற்றிற்குக் கீழ்க்கரையில் கம்பீரமாக உயர்ந்து காட்சியளிக்கிறது.
அம்மணல்மேட்டில் ஒரு பழங்கால புத்தர் சிலை உள்ளது. இம்மேட்டிற்கு ‘அரிக்கன்மேடு’ என்று பெயர் வரக்காரணம் என்ன என்று யோசிக்கும் போது புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்பது நமது நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இம்மேடு அருக்கன்மேடு என்று அழைக்கப்பட்டு, பின்னர் அரிக்கமேடு என மருவியுள்ளது.

கருங்கல் சிற்பமாகிய அப்புத்தர் சிலையின் உயரம் 118 செ.மீ ஆகும். தலைமுடி சுருட்டையாகவும் தலைஉச்சியில் கொண்டையும், காதுகளின் கீழ்ப்பாகம் தொங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. சிலையின் இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் (போர்த்திய நிலையில்) அலங்கரிக்கின்றன. பத்மாசன முறையில் சிலை ஒரு பத்ம பீடத்தில் உட்கார்ந்துள்ளது. இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் உள்ளன. இது 10ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 11ஆம் நூற்றாண்டில் அமைந்ததாக இருத்தல் வேண்டும்.”

P.Z. பட்டாபிராமன் சிலை குறித்துத் துல்லியமாகத் தரும் தகவல்கள், அதாவது இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் என்று ஆடை குறித்துக் குறிப்பிடும் செய்திகள் அச்சிலை புத்தர் சிலையே என்பதனை உறுதிப் படுத்துகின்றன.

அருகன் சிலை, புத்தர் சிலை இரண்டும் சற்றேறக்குறைய ஒரே வடிவில் செதுக்கப்பட்டாலும் இரண்டு சிலைகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆடையே ஆகும். அருகன் சிலைகளில் ஆடை இருப்பதில்லை. புத்தர் சிலைகளில் மட்டுமே ஆடையிருப்பதாகச் செதுக்கப்படும். (சிலையின் ஆடை குறித்த தகவல்களைக் கட்டுரை ஆசிரியரும் நேரில் கண்டும் புகைப்படமெடுத்தும் உறுதி செய்துகொண்டார்)

இச்சிலை குறித்த பழைய குறிப்பொன்று உண்டு. 1761 ஆம் ஆண்டில் வெளியான லெ ழாந்த்தீய் -le gentil என்ற வரலாற்று அறிஞரின் பயணநூலில் இச்சிலை குறித்த விபரங்களை அவர் பதிவு செய்துள்ளார், “அம்மணல் வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இச்சிலையானது தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை போன்றே காணப்படுகிறது. தலையின் வடிவம், முகபாவம், கைகளை அமைத்திருக்கும் முறை, அதன் காதுகள் அனைத்தும் புத்தர் சிலையை ஒத்திருக்கின்றன. அங்கிருந்த மக்களிடம் நான் விசாரித்தபோது அவர்களும் இது பவுத்த சிலை (Baouth) என்று கூறினர்” (கசாலின் பார்வையில் அரிக்கமேடு, ப.115)

வரலாற்று அறிஞர் லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயணக் காலத்தில் மக்களால் பவுத்த சிலை என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலை காலப்போக்கில் பல பெயர் மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

லெ ழாந்த்தீய் -le gentil அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அப்புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் அச்சிலை நிறுவப்பட்ட காலத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் புத்த விகாரையில் வைத்து வழிபடப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்விகாரை காணாமல் போனது வரலாற்றில் ஒரு வினாக்குறியே! புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பொன்று உண்டு.



அருக்கன்மேட்டு புத்தர் சிலை - இன்றைய தோற்றம்

புகைப்படம்: கட்டுரை ஆசிரியர்


“நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் இருந்தது போன்றே புதுச்சேரியிலும் அக்காலத்தில் பர்மா கோயில் இருந்துள்ளது. இதுவும் ஒரு புத்த கோவிலேயாகும். இங்கு புத்த கோவிலிருப்பதானது புதுச்சேரி துறைமுகத்தின் புகழை உயர்த்துவதுடன் இங்கு ஒரு புத்த சமூகமும், புத்தமத இயக்கமும் இருந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. அத்துடன் இந்தோ சீனாவிலிருந்து வந்த ஒரு புத்த சமுதாயமே இங்கு வாழ்ந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.” என்று லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயண நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் (ழுவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப.53)

அருக்கன் மேட்டின் பவுத்த கோயில், பர்மா கோயில் என்ற பெயரால் வழங்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருபதாம் நூற்றாண்டில் அச்சிலையை நிறுவி இந்து சமயக் கலப்புடன் வழிபாடு செய்துவரும் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் அக்கோயிலை பிரமன் கோயில் என்றழைத்தனர். பர்மா கோயில் என்பதுதான் பிரமன் கோயில் என்று மாறியிருக்கலாம். அண்மைக் காலமாக அக்கோயில் விருமன் கோயில் என்று வழங்கப்படுவது களஆய்வில் கண்டறியப்பட்டது.

பர்மா கோயில் - பிரம்மன் கோயில் - விருமன் கோயில்

விருமன் கோயிலில் புத்தர் ருத்ராட்சம் அணிந்து நெற்றியிலும் உடம்பிலும் நீறு பூசி புதிய அவதாரம் எடுத்திருப்பது போதாதென்று கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று பெயரிடப்பட்டிருப்பது கால மாற்றத்தின் விளைவு.

1 comment:

  1. DEAR SIR, WHY CANT YOU PUBLISH A PHOTO OF BUDDHA WITHOUT VIBUTHI,MAALAI AND THOTHI.THEN IT WILL BE VERY CLEAR.MY FRIEND MR.A.JAYA VIJAYAN WHO VISITED THE TEMPLE SAYING THAT IS NOT A BUDDHA AS YOU MENTIONED IT IS MAHAVEERA.

    ReplyDelete

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...